கருணாநிதியும்.. பிளாக்கி, கண்ணன் மற்றும் குட்டி சிங்கமும்!
கருணாநிதி நாய்களை அதிக அளவில் வளர்த்திருக்கிறார்.
சென்னை: எல்லா ஜீவராசிகளுமே இந்த பாசம், அன்பு, கருணைக்குள்தான் அடைப்பட்டு போகிறது. அதற்கு மறைந்த கருணாநிதியும் விதிவிலக்கல்ல.
ஒரு உயிருக்கு மதிப்பு கொடுத்து தன் இயல்பை மாற்றி கொண்டவர் கருணாநிதி. தன் பழக்கவழக்கத்தை மாற்றி கொண்டவர் கருணாநிதி. அந்த உயிர் குடும்ப உறவோ, நட்பு உறவோ, தொண்டர் உறவோ இல்லை. அவ்வளவு ஏன் அது ஒரு மனித உறவே இல்லை. அந்த உயிர் நாய்கள்தான். சிறிய வயதிலிருந்தே பலவித நாய்களை கருணாநிதி செல்லமாக வளர்த்திருக்கிறார். நாய்கள் என்றால் அவ்வளவு பிரியமாக இருந்திருக்கிறார். அதிகாலையில் வாக்கிங் போனாலும் சரி, இவர் பின்னால் நிறைய தெரு நாய்கள் செல்லுமாம்.
அறிவாலயத்துக்கு காவல்
அறிவாலயம் கட்டியபோது அங்கே ஒரு தெருநாய் இருந்துள்ளது. கருணாநிதி தினமும் அங்கு செல்ல செல்ல அவருடன் நெருக்கமாகிவிட்டது. பின்னர், அவர் அறிவாலயம் நுழைந்தாலே அவரது மேல் துண்டை பிடித்து இழுத்து விட்டு விளையாட தொடங்கியது அந்த நாய். அறிவாலயம் உள்ளே நுழையும்போதே பிஸ்கட்டுகளை முதலில் போட்டு விடுவார் கருணாநிதி. பிறகு அவர் வீட்டுக்கு கிளம்பி சென்றாலும் இரவெல்லாம் அறிவாலயத்தை இந்த நாய் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும். ஒருநாளைக்கு எவ்வளவோ பேர் அறிவாலயம் வந்தாலும் யாரையுமே இதுவரை பாய்ந்து கடித்ததே கிடையாதாம்.
கருணாநிதியின் "பிளாக்கி"
அதேபோல, ஆலிவர் ரோடு இல்லத்தில் குடியிருக்கும்போது, பிளாக்கி என்னும் நாய் வளர்த்திருக்கிறார் கருணாநிதி. தினமும் ஏதாவது ஒரு அசைவத்துடன்தான் சாப்பிடுவார் கருணாநிதி. தான் சாப்பிடுவதையே அந்த கருப்பு நாய்க்கும் கொடுத்து வளர்த்தார். இதன்மேல் கனிமொழியும் அதிக பிரியத்துடன் இருந்தார். கடைசியில் பிளாக்கி ஒருநாள் இறந்துவிட்டது. பிளாக்கி இறந்ததுக்கு அப்புறம் அதை வீட்டுலேயே புதைத்துவிட்டனர். புதைத்த இடத்தில் ஒரு செடியும் வளர்த்திருக்கார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து `கறுப்பஞ்செடி' என்னும் ஒரு சிறுகதையை கூட கருணாநிதி எழுதினாராம். பிளாக்கி இறந்துவிடவும் அதன்காரணமாக சில காலம் சோகமாகவே இருந்தார் கருணாநிதி. அந்த வருத்தம் காரணமா 2 வருடங்களுக்கு அசைவ உணவு சாப்பிடுவதையே விட்டுவிட்டார்.
"ஒன் இந்தியா"வுக்கு சிறப்பு பேட்டி
அதன்பிறகு அவருக்கு நெருக்கமானது 'கண்ணன்'. இதைப்பற்றி திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும், எழுத்தாளருமான இளையபாரதி "ஒன் இந்தியா"வுக்காக சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறுகிறார்: "1999-ம் ஆண்டு. 'தென்பாண்டி சிங்கம்' என்ற சீரியலின் தயாரிப்பு பணி தொடர்பாக கருணாநிதியை நேரில் பார்க்க கோபாலபுரம் சென்றேன். அப்போது வாசலில் ஒரு நாய் உட்கார்ந்திருந்தது. நான் அதனை கடந்து வீட்டினுள் சென்றேன். ஆனால் கருணாநிதி வீட்டின் உள்ளே அவருக்காக காத்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கார் வந்துவிட்டது. மடமடவென காரை விட்டு இறங்கினார் கருணாநிதி. அப்போது வாசலில் இருந்த நாய் அவரை பார்த்து தவ்விக் கொண்டு ஓடியது. இதனை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.
இதுதான் என் செல்லம்
உடனே கருணாநிதி என்னிடம் சொன்னார், "பாரதி... இதுதான் கண்ணன். என் செல்லம். நான் சாப்பாடு கொடுத்தாதான் சாப்பிடுவான். இல்லேன்னா நான் வரும் வரைக்கும் பசியாவே இருப்பான்" என்றார். நான் ஆடிப்போய் விட்டேன். ஒரு மனிதரை போல, ஒரு நண்பரை போல அதனை அறிமுகம் செய்து வைக்கிறார் என்று. அதன் பின்னர் என்னுடைய சீரியல் ஒளிபரப்பும் நேரம் வந்துவிட்டதால், டிவி பார்க்க அவருடைய அறைக்கு சென்றேன். எங்களுடன் அந்த நாயும் கூடவே வந்தது. அந்த வரவேற்பறையில் சோப்பாக்கள் போடப்பட்டு இருந்தன.
அப்பாவை பாருடா...
கருணாநிதி அந்த சோபாவில் உட்கார்ந்ததும், பக்கத்தில் போய் இந்த நாயும் உட்கார்ந்து கொண்டது. அந்த சீரியல் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் சீரியல். அதனால் எப்போது சீரியல் தொடங்கினாலும் ஒரு சில நிமிடம் அன்று வரும் தொடர் குறித்து கருணாநிதி டிவியில் தோன்றி பேசுவார். டிவியை ஆன் செய்தவுடன் கருணாநிதி திரையில் தோன்றினார். உடனே அங்கிருந்த நாயும் டிவியை பார்த்தது. பின்னர், மடாரென திரும்பி கருணாநிதியை உற்று உற்று பார்த்தது. இப்படியே டிவியையும் கருணாநிதியும் மாறி மாறி பார்த்ததை கண்ட கருணாநிதியோ, "அப்பாவை பாரு... அப்பாவை பாரு...டா" என்றார் அந்த நாயிடம்.
கருணாநிதியின் சிங்கம்
இந்த சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. தெருநாய், வீட்டு நாய், என்ற பிரிவினையெல்லாம் அவருக்கு இல்லை. கடைசியாக முதல்வராக கருணாநிதி இருந்த சமயம். அப்போது கனிமொழியின் மகன் ஒரு வோடபோன் நாய் வளர்த்தார். அந்த நாயின் பெயர் சிங்கம். இந்த நாய் மேலும் கருணாநிதி கொள்ளை பிரியமாக இருந்தார். இந்த சிங்கத்தின் விசேஷம் என்னவென்றால், முதலில் கருணாநிதி வீட்டுக்கு வந்ததும், அவர் தோளில் போட்டிருக்கும் சால்வையை பிடுங்கி கொள்ளும்.
பாசம் பலவிதமானது
பின்னர் அவரது வேட்டியை பிடித்து இழுக்க தொடங்கும். ஆனால் இந்த நாய் இறந்துவிட்டது. இது நடந்து 3 வருடங்களாகிறது. அதன்பிறகு கருணாநிதி எந்த நாயும் வளர்க்கவில்லை. அதன்பிறகு அவரது நடை தடுமாறியது... உடல் சோர்வுற்றது... எந்நேரமும் அவரது கால்களிலேயே சுற்றி வரும் குட்டிநாய்களில் இடறி கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது" என்று சொல்லி முடித்தார் கவிஞர் இளையபாரதி.
பாசம் பலவிதமானது... அன்பு அபரிமிதமானது... கருணை பொதுப்படையானது... நாய் என்னும் ஜீவராசியை தன் வாழ்நாளில் இவ்வளவு முக்கியத்துவம் அளித்து கருணாநிதி வாழ்ந்திருந்தது பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது.