ஈழத் தமிழர் பிரச்சனை.. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லையா?: பாஜகவுக்கு கருணாநிதி கேள்வி!
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் பாரதிய ஜனதா கட்சியும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையையே கடைபிடிக்கிறதா? அப்படியானால் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமது நம்பிக்கை மெய்யாகுமா?" என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
வெளியுறவு செய்தி தொடர்பாளர் கருத்து..
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, 11-7-2014 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர்கள் பேசிய போது, தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் உரையாடிய போதிலும், அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரின் கருத்து நமக்கு வருத்தத்தைத் தரக் கூடியதாக அமைந்துள்ளது.
சம்பிக்க ரணவக்க சொல்வது என்ன?
இலங்கை அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க என்பவர் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்திய - இலங்கை உடன்படிக்கை என்பது இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று. அது நாட்டு மக்கள் விரும்பி பெற்றுக் கொண்ட உடன்படிக்கை அல்ல. அத்துடன் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களைக் கோரும் எந்த உரிமையும் விக்னேஸ்வரனுக்கு இல்லை" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
சுஷ்மா- பெரீஸ் பேசியது என்ன?
குறிப்பாக இலங்கை அமைச்சர் பெரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசிய நேரத்தில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள். இலங்கை அரசியல் அமைப்பின் 13வது அரசியலமைப்புச் சட்டப் பிரிவில் திருத்தம் கொண்டு வருவது பற்றியும் விவாதித்திருக்கிறார்கள்.
புது நகரம் அமைக்கும் இலங்கை
இது தவிர, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே புதிய நகரம் ஒன்றினை இலங்கை அரசு அமைக்கவும், அதன் மூலம் 38 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் உள்ளதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மீனவர் விடுதலைக்கு நன்றி சொன்ன சுஷ்மா
மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அதிக அளவில் விடுதலை செய்யப்பட்டதற்காக, பெரீசுக்கு சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்ததாக சையத் அக்பருதீன் அப்போது செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
ஐ.நா.வில் எதிர்த்து வாக்களிப்பு
மேலும், இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க் குற்ற விசாரணையை இந்தியா ஆதரிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்புக்கு வந்த போது, இந்தியா அந்த தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததோடு, இலங்கைக்கு வல்லுனர் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டுமென்று தீர்மானத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பிரிவை எதிர்த்தே வாக்களித்தது என்றும், அந்தக் கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்றும் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்ததாக சில நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.
ஐமு கொள்கையேதானா?
இவ்வாறு நமது வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது உண்மையானால், அது கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டையே இந்த அரசின் நிலைப்பாடாகவும் கொண்டிருப்பதை உறுதி செய்வதாக உள்ளது.
அன்று டெசோ செய்தது..
2013ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை அரசைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று வரவிருந்த நேரத்திலேயே நமது "டெசோ" இயக்கத்தின் சார்பில் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். அதற்காகவே 5-3-2013 அன்று இலங்கைத் தூதரகத்தின் முன்பு முற்றுகையிடுகின்ற போராட்டத்தையும், அதே நாளில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
தீர்மானத்தை ஆதரிக்க கோரிக்கை
அதன் பிறகு அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கின்றன, அதைப்போல இந்தியாவும் அதனை ஆதரித்திட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.
நாடாளுமன்றத்தில் குரல்
நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா, சமாஜ்வாடி கட்சி, மார்க்சிஸ்ட், சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஏன் பா.ஜ.க. போன்ற கட்சிகள் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்து கடுமையான வாதங்களை அப்போது எடுத்து வைத்தார்கள்.
அன்று சின்கா பேசியது இதுதானே
குறிப்பாக பா.ஜ.க. சார்பில் பேசிய அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா அவர்கள், "இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட் டுள்ள ராணுவத்தை உடனே அகற்ற இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும். இலங்கை இனப் படுகொலை தொடர்பாக வெளியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பாரபட்சமில்லாத சர்வதேச விசார ணைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நாடாக மட்டும் இந்தியா விளங்கக் கூடாது; இந்தியாவே அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் நாடாக இருக்க வேண்டும்"" என்றெல்லாம் பேசினார்.
டெசோ வேலைநிறுத்தம்
அதற்குப் பிறகும் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இறங்கி வராத காரணத்தால் 12-3-2013 அன்று "டெசோ" இயக்கத்தின் சார்பில் பொது வேலை நிறுத்தமும் நடத்தினோம். சென்னையில் அன்பகம் முன்பு கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் சாலை மறியலிலே ஈடுபட்டு கைதானார்கள்.
நான் சொன்னது என்ன?
16-3-2013 அன்று நான் விடுத்த ஓர் அறிக்கையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளி களை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை சேர்ப்பதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
எங்கள் மீது விமர்சனம்
தி.மு. கழகம் இந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சிக்காரர்களும், வேறு சிலரும் மத்திய அரசைக் குறை கூற முற்பட்ட நேரத்தில் எல்லாம் "தி.மு. கழகம் அங்கம் வகிக்கும் மத்திய அரசு"" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். தி.மு. கழகம் ஏதோ மத்திய அரசில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களைப் பெற்று, அந்த ஆட்சியின் ஸ்திரத் தன்மையை நிர்ணயிக்கும் ஒரு கட்சி என்பதைப் போல அவதூறு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இலங்கையிலே நடைபெற்ற படுகொலைகளையெல்லாம் தி.மு.கழகம் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள்.
அரசில் இருந்து விலகும் முடிவு
அதுபற்றியெல்லாம் நினைவிலே எடுத்துக் கொள்ளாமல், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு ஆதரிக்க இந்திய அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கு மத்திய அரசிடமிருந்து இசைவான பதில் வராத நிலையில், தி.மு. கழகம் இந்திய அரசின் அமைச்சரவையிலே மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்று 15-3-2013 அன்று அறிக்கை விடுத்தேன்.
சந்தித்த குலாம்நபி
உடனே மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து பேசினார்கள். அப்போது நான் அவர்களிடம், "இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க் குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் இந்தியா பிரகடனப்படுத்த வேண்டும்; நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டுவர வேண்டுமென்றும், அந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.
பிரதமர், சோனியாவுக்கு கடிதம்
இதே கருத்தினை உள்ளடக்கி பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவராக விளங்கிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் கடிதமும் அனுப்பினேன்.
அரசில் இருந்து வெளியேறினோம்
தி.மு.கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடியாக விலகிக் கொள்வ தென்று முடிவு செய்து அறிவித்தது.
உடனே சிபிஐ ரெய்டு
இந்த அறிவிப்பினை தி.மு. கழகம் செய்த அடுத்த நாளே கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை மேற்கொண்டது.
அவசர செயற்குழு
27-3-2013 அன்று அவசரமாகக் கூட்டப்பட்ட கழகச் செயற் குழுவில் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு. கழகம் மத்திய அரசிலிருந்து விலகியது. 2013ஆம் ஆண்டு தி.மு. கழகம் மேற்கொண்ட நடவடிக்கை இது.
டி.ஆர். பாலு மனு
2014ஆம் ஆண்டிலும் 21-2-2014 அன்று நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவராக இருந்த தம்பி டி.ஆர். பாலு தலைமையில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து, மனித குலத்துக்கே எதிரான போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்ற மனுவினைக் கொடுத்தார்கள்.
மீண்டும் கோரிக்கை
4-3-2014 அன்று இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஜெனீவா மாநாட்டில் தாக்கல் செய்தன. ஆனால் அந்தத் தீர்மானம் உலகத் தமிழர்களின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவுக்கு இல்லை. அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு மார்ச் 27 அன்றும் நடைபெறுமென்று அறிவித்த போது, அந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். ஆனால் நடந்தது என்ன?
இந்தியா கலந்து கொள்ளவில்லை..
அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவோடு நிறைவேறியது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து இருக்கின்றன. 11 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித் திருக்கின்றன. அப்படிப் புறக்கணித்த நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. அப்போது ஐ.நா.வுக்கான நம்முடைய இந்தியப் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளது என்று விமர்சனம் செய்தார்.
தென்னாப்பிரிக்கா, வங்கதேசம்..
பிற நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாதென்றால், பண்டித நேரு அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் நிற வெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா? வங்காள தேசத்தில் முஜிபுர் ரகுமானுக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிக் கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா?
ஐமு கொள்கையை பின்பற்றுவது சரியா?
கடந்த கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே கையாண்ட அதே அணுகுமுறையை தற்போது பா.ஜ.க. அரசும் மேற்கொள்வது சரிதானா? இலங்கையிலே வாழும் இந்தியத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டாமா?
சின்கா பேசியது மறந்து போச்சா
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடை பெற்ற போது இலங்கையிலே வாழும் இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ள வேண்டுமென்று பா.ஜ.க.வைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா நாடாளுமன்றத்தில் பேசியது இன்று மறந்து போய் விட்டதா?
உலகத் தமிழர் நம்பிக்கை
தங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பிரதமர் மோடி தலைமையிலே உள்ள பா.ஜ.க. ஆட்சியில் ஏற்படும் என்று உலகத் தமிழர்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்களே; கடந்த கால ஆட்சியிலே எடுத்த முடிவினைத்தான் இந்த ஆட்சியிலும் எடுப்போம் என்றால், ஆட்சி மாற்றம் எதற்காக? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லையா?
நம்பிக்கை மெய்யாகுமா?
ஈழத் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த பா.ஜ.க. ஆட்சியில் விடிவு காலம் ஏற்படும் என்று இன்னமும் நம்புகிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமது நம்பிக்கை மெய்யாகுமா?