போலி இருப்பிடச்சான்று மருத்துவ படிப்புக்கு தமிழகத்தில் நுழையும் கேரள மாணவர்கள்
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்குமான தர வரிசைப்பட்டியலை ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், நேற்று முதல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
போலி இருப்பிடச்சான்று
கலந்தாய்வில் பங்கேற்றோர் தங்களின் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச்சான்றுடன் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளா மருத்துவ கல்லூரிகள்
கேரளாவில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் சிலர் தமிழகத்தில் வசிப்பது போல போலி இருப்பிடச் சான்று பெற்று இங்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
தரவரிசை பட்டியல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில், தமிழக அரசு மற்றும் கேரள அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலை ஆராந்து பார்த்ததில், 9 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மாணவர்கள் முறைகேடு
கேரளாவில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பது கடினம் என்பதால், அவர்கள் தமிழகத்தில் போலியான இருப்பிட முகவரி பெற்று விண்ணப்பத்திருக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதேபோல் மற்ற மாநிலத்தவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவைப் பெற்ற சென்னை காவல் ஆணையர், புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
போலிகள் மீது நடவடிக்கை
செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், மருத்துவக் கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பது உறுதியானது. அவர்கள் மீது முறைப்படி புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு சிக்கல்
நீட் தேர்வு நடத்தப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பலரின் மருத்து கனவில் மண் விழுந்துள்ளது. அப்படியும் கஷ்டப்பட்டு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்தாய்வில் பல மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த இடத்திற்கும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று மூலம் தமிழக மருத்துவக்கல்லூரிக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர்.