தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையை முன்வைத்து கொ.ம.தே.க. ஈஸ்வரனின் 9 'நச்' கேள்விகள்
தமிழக ஆளுநருக்கு கொ.ம.தே.க சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒன்பது கேள்விகளை முன்வைத்து உள்ளார்.
சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையை முன்வைத்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஒன்பது கேள்விகள் எழுப்பி உள்ளார். இதற்கு ஆளுநர் பதிலளிக்கத் தயாரா என்று கேட்டு தனது கேள்விகளை முன்வைத்து உள்ளார்.
2018ம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதை ஆளுநர் தனது உரையை வாசித்து தொடங்கி வைத்தார். அப்போது இந்த ஆட்சியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும், மக்கள் பிரச்னைகள் சிறப்பாக கையாளப்படுவதாகவும் குறித்தும் பாராட்டி பேசி இருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநருக்கு உண்மை நிலை தெரியாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ஒன்பது கேள்விகளை ஆளுநரிடம் முன்வைத்து உள்ளார்.
தமிழகத்துக்கு வந்த முதலீடு ?
2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசின் சாதனையாக ஆளுநர் புகழ்ந்திருப்பது வியப்பாக இருக்கிறது. அறிவிக்கப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எவ்வளவு முதலீடு இன்றைய தேதிவரை தமிழகத்திற்கு வந்திருக்கிறது என்பதை ஆளுநர் விளக்க முடியுமா ?.
வரி சிக்கலை ஆளுநர் தீர்ப்பாரா
சிக்கல் இல்லாமல் GST-யை தமிழக அரசு அமல்படுத்தியிருக்கிறது என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். சிக்கல் தமிழக அரசுக்கு இல்லைதான். சிக்கலில் சிக்கி திக்குமுக்காடுவது தமிழகத்தின் தொழில்துறையும், வியாபாரிகளும், தமிழக மக்களும்தான். இந்த சிக்கல்களை தீர்த்து வைக்க ஆளுநர் தயாரா ?.
தெளிவுபடுத்த தயாரா ?
நிதிப்பற்றாக்குறை இருப்பது உண்மைதான் என்று ஆளுநர் உரையில் ஆளுநர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கு என்னென்ன திட்டங்களை தமிழக அரசு வைத்துள்ளது என்பதை ஆளுநர் உரையில் தெளிவுப்படுத்தி இருக்க வேண்டாமா ?.
புதிய திட்டங்களுக்கு நிதி ஆதாரம்
தமிழகத்தின் விவசாயம் மற்றும் தொழில்துறையில் மொத்த உற்பத்தியும் குறைந்ததுதான் வருமானம் குறைந்து நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதற்கான காரணம். அந்த வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கின்ற முயற்சிகளை பற்றி எந்த விவரமும் இல்லை. அறிவிக்கப்பட்டிருக்கின்ற நலத்திட்ட உதவிகளுக்கு தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் ?.
மீனவர் மீட்பு குறித்து பொய்யான தகவல்
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை தேடுகின்ற பணியை இந்திய இராணுவம் டிசம்பர் 26ம் தேதியே நிறுத்திவிட்டது என்று இராணுவ அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்தி இருக்கின்ற நிலையில் மீனவர்களை தேடும் பணியை மத்திய அரசு தொடர்கிறது என்று ஆளுநர் உரையிலே குறிப்பிட்டிருப்பது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ளாமல் இருப்பதை காட்டுகிறது. இவர் மாவட்ட மாவட்டமாக ஆய்வு செய்து என்ன சாதிக்கப்போகிறார்.
பேருந்து போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழக மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக சொல்லும் ஆளுநர் அதை பற்றி தனது உரையில் குறிப்பிடாதது ஏன் ?.
வாய் திறக்காத ஆளுநர்
தமிழக மக்களும், விவசாயிகளும் வறட்சியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து மக்களை காப்பாற்ற எடுக்கப்பட இருக்கின்ற நடவடிக்கைகளை பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடாதது வேதனையளிக்கிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டத்திலும் வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பது எதனால் ?
பொய்யான புகழாராங்கள்
டெங்கு காய்ச்சலினால் பல்லாயிரக்கணக்கானோர் இதுவரை உயிர் இழந்திருக்கிறார்கள். இன்னும் டெங்கு காய்ச்சலை தமிழக சுகாதாரத்துறை கட்டுப்படுத்தவில்லை. அந்த சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கிறது என்று புகழாரம் சூட்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
தமிழகத்திற்கு தலைகுனிவு
முன்னாள் முதலமைச்சரும், அவரை சார்ந்தவர்களும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றது தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆளுநர் தன் உரையில் குறிப்பிடாதது ஏன் ?. இதைப் பற்றி குறிப்பிடாமல் முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லம் ஆக்கப்படும் என்று அறிவித்தது எதனால் ?
மோசமான நிர்வாக சூழல்
மொத்தத்தில் சட்டமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை அரசு எழுதி கொடுத்ததை என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமலே ஆளுநர் படித்தது போல இருக்கிறது. மோசமான நிர்வாக சூழலால் தடுமாறி கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை ஏற்படுத்துவதாக இந்த உரை இல்லை என்று தனது அறிக்கையில் ஈஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.