குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சித்திக்கு ரூ. 50,000 அபராதம்.. கோவை கோர்ட் அதிரடி
கோவை: கோவையில் முதல் மனைவியின் குழந்தைகளைக் கொடுமைப் படுத்திய சித்திக்கு ரூபாய் 50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யுனிட் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு ஸ்ரீதர், சஞ்சய் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் சுகுணா கொலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அசோக்குமார் ராஜேஸ்வரி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2013 நவம்பர் 20 ஆம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் ஸ்ரீதர், சஞ்சய் ஆகிய இருவருக்கும் தவறு செய்த காரணத்துக்காக குழந்தைகளின் உடலில் ராஜேஸ்வரி சூடு வைத்துள்ளார். மேலும் இருவரையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள சுகுணாவின் தாயார் சிறுவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக சென்ற பொது இதுகுறித்து சிறுவர்கள் தங்களது பாட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக செல்வபுரம் போலீஸில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இராஜேஸ்வரி மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
பிறகு இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ராஜேஸ்வரிக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.பி.சுப்ரமணியம் தீர்ப்பளித்தார்.
இத்தொகையை ஸ்ரீதர், சஞ்சய் ஆகியோருக்கு தலா ரூபாய் 25000 வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.