கோவில்பட்டியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் ரூ 7 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவில்பட்டி பகுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக ஏ.எஸ்.பி முரளிராம்பாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.எஸ்.பி முரளிராம்பா உத்தரவின்பேரில் தனிப்பிரிவு போலீஸ் அமைக்கப்பட்டு கள்ள நோட்டு கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய பகுதியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ்நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் தென்காசி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த அசன் , விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேல காந்திநகரைச் சேர்ந்த சதுரகிரி , திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த லூர்துசாமி என்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் வைத்திருந்த பேக்குகளை போலீசார் சோதனை செய்தபோது, பேக்குகளுக்குள் ரூபாய் 500 கள்ளநோட்டு கட்டுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் 3 பேரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேலும் பலர் இந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேர்கள் அளித்த தகவலின்பேரில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வந்த கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்கநகரை சேர்ந்த மகேஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 லட்சம் கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மந்தித்தோப்பில் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து கள்ளநோட்டுக்களை அச்சடிக்க பயன்படுத்திய கள்ள நோட்டுக்களை அச்சடிக்கும் மிஷின், பேப்பர்கள் போன்றவைகளையும் போலீசார் கைப்பற்றினர்.ரூபாய் 500 கட்டுகளை கொண்ட மொத்தம் ரூபாய் 7 லட்சத்து 23 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.