சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்: கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி இனாம் மணயாச்சியை சேர்நதவர் சங்கிலிபாண்டி. இவர் பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் மாலை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த மேற்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் அவரை தரக்குறைவாக பேசி தாக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து ஊர்மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பைபாஸ் ரோட்டில் திரண்டு மறியல் செய்தனர். எஸ்ஐ அருள் சாம்ராஜை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கவுன்சிலர் சங்கிலிபாண்டியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி ஏஎஸ்பி முரளிராம்பா, இன்ஸ்பெகடர் அஜய்குமார், சாகுல் ஹமீது, தர்மராஜ், மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். கவுன்சிலர் சங்கிலிபாண்டியை விடுவிப்பதாகவும், சப் இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஏஎஸ்பி முரளிராம்பா உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட சங்கிலிபாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மறியல் காரணமாக கோவில்பட்டி இனாம் மணியாச்சி பைபாஸ் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.