குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா: வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
குலசேகரப்பட்டிணத்தில் முத்தாரம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி: தசரா என்றதும் அனைவருக்கும் மைசூரில் நடக்கும் திருவிழா தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் தசரா குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். தசரா விழாவின் பத்தாம் நாள் முத்தாரம்மன் மகிஷாசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது.
குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.
நோய் தீர்க்கும் பிரசாதம்
குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
குலசை தசரா விழா
இந்த ஆலயத்தில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். கொடியேற்ற தினத்திற்கு முந்தைய இரவில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். இந்த ஆண்டு திருவிழா செப்டம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பக்தர்கள் வேடம் போடுவது ஏன்?
தசரா விழாவிற்கான கொடியேற்றப்பட்ட உடனேயே காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வித, விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று காணிக்கை சேகரிப்பார்கள். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் போன்றவைகளை காணிக்கையாக வழங்குவர்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.
காளி வேடம்
தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தை பார்க்கவே அச்சமாக இருக்கும். ஆனால் காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது.
கடும் விரதம்
காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். பிரம்மச்சரியம், பச்சரிசி சாப்பாடு என மனதையும், உடலையும் அடக்கி ஆண்டு விரதமிருக்கின்றனர்.
காளியின் பயங்கர கோலம்
இது அம்பிகைக்கான திருவிழா என்பதால் காளிக்கே அங்கு அதிக முக்கியத்துவம். நீண்ட சடை முடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுக்க செந்நிற வர்ண பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வர்ண பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான பிரத்யே ஆடைகள், வாயில் கோரப்பல் என மிகவும் கஷ்டமான காளி வேடத்தை போட்டு காணிக்கை சேகரிக்கின்றனர்.
காணிக்கை சேகரிப்பு
கொடியேற்றப்பட்ட உடன் இவர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிப்பார்கள். பணக்காரர்களாக இருந்தாலும், வேடம் அணிந்த பிறகு, ஏழை வீட்டிலும், பிற ஜாதியினர் வீட்டிலும், பிற மதத்தவர்கள் வீட்டிலும் போய் நின்று "முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க.." என்று சொல்லி காணிக்கை கேட்டாக வேண்டும். அந்த காணிக்கையை 10 நாள் எடுத்து தனது காலடியில் சமர்ப்பிக்கும் பக்தனை அம்பிகை தாயின் கருணையோடு வாரியணைத்து வேண்டிய வரங்களை அள்ளிக்கொடுக்கிறாள்.
செப்டம்பர் 30ல் மகிசாசூரசம்காரம்
குலசை முத்தரம்மன் கோவிலில் சனிக்கிழமையன்று மகிசாசூரசம்காரம் நடைபெற உள்ளது. பல பகுதிகளில் இருந்தும் முத்தாரம்மனைக் காண வந்து கொண்டுள்ளனர். விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும். அங்கு மகிசாசூரசம்காரம் நடைபெறும். அம்மன், மகிசாசூரனை சூலாயுதத்தால் வதம் செய்யும் போது காளி வேடம் அணிந்தவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை வதம் செய்வார்கள்.
முத்தராம்மனுக்கு அபிஷேகம்
இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும்.
பாலபிஷேகம்
தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12ஆம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.
படங்கள் உதவி திருச்செந்தூர் பாலமுருகன்