நெருங்கி வரும் குலசை தசரா.. பக்தர்களுக்கான வேடப் பொருள் தயாரிப்பு தீவிரம்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணத்தில் தசரா விழா நெருங்கி வருவதால் வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்த பெற்றது. பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்வர்.

குலசேகரப்பட்டிணம் தசரா விழாவுக்கு வரும் பக்தர்கள் காளி, விஷ்ணு, சக்தி, அய்யனார், தூர்கை, குரங்கு, கரடி, புலி உள்பட பல்வேறு வேடங்களை அணிந்து வருவர். இந்த வேடப்பொருட்களுக்கு தேவையான சவுரி முடி, சூலாயுதம், கண்மலர், ஈட்டி, திரிசூலம், அனுமார் பயன்படுத்தும் குண்டலம் உள்பட பல்வேறு வேடப்பொருட்களை உடன்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் தீவிரமாக தயாரித்து வருகின்றனர். இதுபோல் அம்மன், பெண்,கரடி வேடம் அணிபவர்கள் பயன்படுத்துவதற்கான முடி மற்றும் ஜடைகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கான ஓரிஜினில் முடி விலை அதிகம் என்பதால் சந்தையில் நரம்பினால் செய்யப்பட்ட முடி விற்பனைக்கு வந்துள்ளது. மதுரை, கோவையில் இருந்து இந்த நரம்பு முடிகளை வாங்கி வரும் தொழிலாளர்கள் அதனை வேடம் அணிபவர் விரும்பத்துக்கு ஏற்றவாறு உருமாற்றி தருகி்ன்றனர். சிலர் 40 அடி வரை முடி வேண்டும் என்கி்ன்றனர்.
குலசேகரப்பட்டிணம் திருவிழாவை ஓட்டி தற்போது குலசேகரப்பட்டிணம், லில்லிகுடியிருப்பு, திசையன்விளை சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் தற்காலிக குடிசை அமைத்து நரம்பினால் ஆன முடி பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேடப்பொருட்கள் தயார் செய்யும் ராமன் என்பவர் கூறுகையில், தசரா விழாவில் பக்தர்கள் கடுமையாக விரதம் கடைபிடிப்பர். அதுபோல் வேடபபொருட்கள் தயார் செய்யும் நாங்களும் கடுமையாக விரதம் இருந்து வருகிறோம். விரதம் இருந்து தான் பொருட்கள் தயார் செய்கிறோம். அதன் மூலம் வேடம் அணியும் பக்தர்களுக்கு கிடைக்கும் நன்மை எங்களுக்கும் கிடைக்கும். இதில் காளி வேடம் அணியும் பக்தர்களுக்காக 10 கை தயாரிப்பதுதான் சவாலானது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications