கும்பகோணம் தீவிபத்து – ஒரு நபர் ஆணையத்தின் முதல்கட்ட விசாரணை துவக்கம்
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் முதல்கட்ட விசாரணை கும்பகோணத்தில் நேற்று தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தமிழக அரசு தலா ரூபாய் 1 லட்சம் வழங்கியது. கூடுதல் இழப்பீடு கோரி பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில், மனுதாரர்கள் கோரும் இழப்பீட்டு தொகை தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் 94 பேரும், காயமடைந்த 18 குழந்தைகளின் பெற்றோரும் கூடுதல் இழப்பீடு கோரும் மனுவை இந்த ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களின் மீது முதல் கட்டமாக, கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணையம் முடிவு செய்து, தீ விபத்தில் இறந்த மூன்று குழந்தைகளின் பெற்றோரான செல்வராஜ், அருள் சேவியர், மாடசாமி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியது.
கும்பகோணம் நீதிமன்றத்தில் சிறப்பு அறையில் ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை அந்த 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் தமிழரசன் ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்குரைஞராக கோவிந்தராஜ் இருந்து குறுக்கீடு செய்து விசாரித்தார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர், தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடும், சம்பவம் நடந்த நாள் முதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நாள் வரை 9 சதவீத வட்டியும் சேர்த்து வழங்கிட வேண்டும் என்று ஆணையத்திடம் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பிறகு நீதிபதி வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம், "பள்ளி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த 94 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் காயமடைந்த 18 குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட 112 பேர் கூடுதல் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரும், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு அளித்தால் குறிப்பிட்ட கால அவகாசமான 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும். வரும் 23 ஆம் தேதியன்று அடுத்த கட்ட விசாரணை 5 பெற்றோர்களிடம் இங்கேயே நடத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications