மதுரை மருத்துவமனையில் மீண்டும் ஒரு குழந்தை கடத்தல்!
மதுரை: மதுரையில் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண்குழந்தை ஒன்றை பெண்மணி ஒருவர் நேற்று கடத்திச் சென்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மருத்துவமனை கண்காணிப்பு கேமரா மூலம் அப்பெண்மணியை சிலமணித்துளிகளிலேயே போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்த உப்புகார்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்து . கர்ப்பிணியான இவர் கடந்த 9 ஆம் தேதி பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் முத்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று காலை கருப்பசாமி வெளியில் சென்றுள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்து கை கழுவ வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. மற்றவர்களுக்கும் குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை.
உடனடியாக மருத்துவமனைக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குழந்தைகள் பலமுறை களவு போய் உள்ளன.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குழந்தையைத் தேட ஆரம்பித்தனர்.
பிரசவ அறை கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது, அதில் ஒரு இளம்பெண் குழந்தையை தூக்கிச் செல்வது தெரிய வந்தது. உடனே அப்பெண்ணைத் தேட ஆரம்பித்தனர் போலீசார்.
இதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்கநாதபுத்தூரைச் சேர்ந்த விக்னேஷின் மனைவி முத்து என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது கடத்தலுக்கான காரணம் தெரிய வந்தது.
அதே நாளில் அவருக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை இன்குபேட்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டால் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றுதான் குழந்தையைக் கடத்தியதாக கூறியுள்ளார்.
மதுரை மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.