மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை!
சென்னை: மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் வீரவணக்க நாளாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள நடராசன், தாளமுத்து மற்றும் டாக்டர் தருமாம்பாள் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் தலைமையில் மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, சுதர்சனம் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னை (தெற்கு) மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சட்டசபை முன்னாள் உறுப்பினர் செங்கைசிவம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மூலக்கொத்தளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியுடன் வீரபாண்டி ராஜா குடும்பத்தினர் சந்திப்பு
இதனிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா தமது குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார்.
அண்மையில் வீரபாண்டி ராஜாவின் மகள் கிருத்திகாவுக்கும் ஜெய்ரத்தினத்துக்கும் நடைபெற்ற திருமணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்திருந்தார். மணமக்களுடன் வீரபாண்டி ராஜா குடும்பத்தினர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.