ஜெ. வழக்கு: சாட்டையடி தீர்ப்பை வரவேற்கிறோம்- குன்ஹாவை பாராட்டி போஸ்டர்
திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்று திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி மைக்கேல் குன்ஹா கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவை கண்டித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியதுடன், பேனர்களும் வைத்தனர். ஒரு போஸ்டரில் கடவுளை மனிதன் தண்டிப்பதா என்று கேட்டிருந்தனர். மேலும் குன்ஹாவை கிறிஸ்தவ மத வெறியர் என்று மற்றொரு போஸ்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்று திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சாட்டையடி தீர்ப்பை வரவேற்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளதோடு குன்ஹாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.