தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை - ராஜ்நாத் சிங்கிடம் வித்யாசாகர் ராவ் விளக்கம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். இதனால் தமிழகத்தில் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடைகள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலையில் தமிழகத்தில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், இயல்புநிலையில் இருப்பதாகவும் காவல்துறை தலைவர் தெரிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இயல்பு நிலை முழுமையாக திரும்பியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கட்டுக்குள் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் போனில் பேசிய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் நிலவும் நிலைமை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தமிழக ஆளுநரிடம் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு விசாரித்தார். தலைமைச் செயலாளரிடம் முதல்வர் உடல்நிலை குறித்தது வெங்கய்யா நாயுடு கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.