தீபாவளியை இப்படியும் கொண்டாடிப் பாருங்களேன்! #GiftOthersforDiwali
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள் இந்த ஆண்டு தீபாவளியை இப்படி கொண்டாடிப் பாருங்களேன்.
Recommended Video
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை பிறர்க்கு கொடுத்து உதவும் பண்டிகையாக வித்தியாசமாகக் கொண்டாடி அனைவர் முகத்திலும் புத்தொளியை ஏற்படுத்துவோம்.
தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை வடஇந்திய பண்டிகை என்றாலும் கார்ப்பரேட் விளம்பரங்களால் அவையும் இந்து பண்டிகையின் ஒரு அங்கமாக தமிழ்நாட்டிலும் வேரூன்றி விட்டது. தீப ஒளி வீசும் திருநாள் என்பதாலேயே அந்த நாளில் பட்டாசுகளை வெடித்து இருளை அகற்றி வாழ்வில் புத்தொளி வீசும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஜவுளிக் கடை கடையாக ஏறி இறங்கி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து புத்தாடை வாங்கி அணிந்து பலகாரம் செய்து அதிகாலையில் இறைவனை தொழுது அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை பகிர்ந்து கொள்வது தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலை இறை வழிபாடு முடிந்த பிறகு நாள்முழுவதும் டிவி நிகழ்ச்சிகள் முன்பு கிடையாய் கிடப்பது, அல்லது தியேட்டர் சென்று புதுப்படத்தை பார்த்து ரசிப்பது இத்தோடு தீபாவளி முடிந்து விடுகிறது.
புதிதாக முயற்சி செய்யுங்கள்
ஒரு மாற்றத்திற்காக இந்த தீபாவளியை வேறு விதமாக கொண்டாடிப் பார்த்தால் என்ன. பண்டிகை என்பதே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான். அந்த கலாச்சாரம் மறைந்து மனங்கள் அனைத்தும் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று சுருங்கிப் போய்விட்டன. தீபாவளிக்கு இன்னும் 1 வார காலமே உள்ள நிலையில் ஒரு புது முயற்சியை கையில் எடுங்கள்.
முடிந்ததை பரிசளியுங்கள்
பணக்காரர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் இல்லை, நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ள நினைக்கும் அனைவருமே மனதால் வசதி படைத்தவர்களே. அந்த வகையில் உங்களால் இயன்ற ஏதோ ஒரு பொருள், சின்ன கிளிப், வண்ண பென்சில், பொம்மை, குறைந்த விலை ஆடைகள் என எதையாவது உங்கள் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சிப்படுத்துங்கள்
சாலையில் நீங்கள் பார்க்கும் குழந்தைகள், போக்குவரத்து நெரிசலில் பொருட்களை விற்கும் குழந்தைகள், சாலையோரத்தில் பூக்கடை வைத்திருப்பவர், பாதசாரியில் செருப்பு தைக்கும் தொழிலாளி, காய் விற்கும் பாட்டி என உங்கள் கண்ணில் படுவோருக்கு சிறு சிறு பரிசுகளை தந்த அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.
ஒளியை பரப்புங்கள்
உங்களுக்கு சாதாரணமாகப்படும் ஒரு பொருள் அவர்களுக்கு விலை உயர்ந்த பொருளாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் எதிர்பாராத பரிசு அவர்கள் முகத்தில் கொண்டு வரும் வெளிச்சம் இருக்கிறதே அதுவே நீங்கள் தீபாவளி கொண்டாடுவதற்கான அர்த்தமாகும்.
உதவும் குணத்தை கற்றுத் தர
பண்டிகைகள் என்பதே இருப்பவர்கள் இல்லாதவர்க்கு கொடுப்பது தான். பணக்காரர்கள் மட்டும் தான் உதவி செய்ய வேண்டும் என்று இல்லை, தங்களிடம் உள்ள பொருளை தனக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் அளித்து உதவுவதும் தான் பண்டிகையின் சிறப்பு. மானுடம் தழைக்க, அடுத்த தலைமுறைக்கும் உதவும் குணத்தை கொண்டு செல்ல இன்றே இந்த தீபாவளி பரிசளிப்பை தொடங்குவோம் என்று உறுதியேற்போம்.