சேலம் காவலர் ராஜூ கொலை வழக்கு- 7 பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம் அன்னதானப்பட்டி காவலர் ராஜூ கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம்: சேலத்தில் தலைமைக் காவலர் ராஜூ கொடூர கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ,41. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும், நவீன் என்ற மகனும் உள்ளனர். ராஜூ சேலம் மாகநர தெற்குசரக போக்குவரத்துப் பிரிவில்காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சேலம் மாநகர காவல் ஆணையாளர், துணை ஆணையாளர், ஆகியோர் ராஜூ உடல் கிடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ராஜூ ஆடைகள் கழற்றப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது தலையின் பின்பக்கம் கல்லால் தாக்கப்பட்டு இருந்தது. அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவின் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை பின்னணி
இந்த கொலை மதுபோதையினால் நடந்தது என்று தெரியவந்தது. அதாவது, கொலை நடந்த அன்று அதன் அருகே உள்ள எடைமேடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமாரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். மேலும் அவரது நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதில், இந்த கொலைக்கு மூலக்காரணமே செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து, இந்த கொலை தொடர்பாக சேலம் பொடாரங்காட்டை சேர்ந்த செந்தில்குமார், 36, சீலநாயக்கன்பட்டி சின்னையன் நகரை சேர்ந்த முருகன், 45, வீரமணி,31, பிரபு,33, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்,31 சின்னையன் நகரை பாலன் என்கிற பாலகிருஷ்ணன்,35, ராஜா என்கிற காட்டான் ராஜா ஆகியோரை கைது செய்தனர். சம்பவத்தன்று கைதான 7 பேரும் எடைமேடை அருகே மதுகுடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் ஏட்டு ராஜூ, பொதுமக்கள் நடமாடும் பகுதியில் இவ்வாறு மது குடிக்கலாமா? என்று கூறியதுடன், அவர்களின் சிலரை பிடித்து அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 7 பேரும் ஒன்று சேர்ந்து, ராஜூவை தாக்க ஆரம்பித்தனர்.
அடித்து கொலை
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ராஜூவை மறைவான இடமான பாழடைந்த இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரது சட்டை பையில் இருந்து விழுந்த அடையாள அட்டையை பார்த்த பின்னர் தான் அவர் போலீஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளை போலீஸ் அடிப்பது போல உன்னை அடிக்க வேண்டும் என்று கூறி, ராஜூவை அரை நிர்வாணமாக்கி கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். ராஜூவை கொடூரமாக கொலை செய்த செந்தில்குமார், முருகன், வீரமணி, பிரபு உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.