இன்று தான் நிம்மதியாக இருக்கிறது - மல்லையா கைதை கொண்டாடும் முன்னாள் ஊழியர்கள்
லண்டனில் தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்யப்பட்ட செய்தியை கிங்ஃபிஷர் நிறுவன முன்னாள் ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை : லண்டனில் ஸ்காட்லாண்டு யார்டு போலீசாரால் விஜய் மல்லையா கைது செய்யப்பட்ட செய்தி, கிங்ஃபிஷர் நிறுவன முன்னாள் ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு ஏப்ரல் 18 மறக்க முடியாத நாள். லண்டனில் தலைமறைவாகி ஓராண்டு ஆன நிலையில் இன்று அதிகாலையில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி வெளியானஅடுத்த கனம் சில நிமிடங்கள் ஆச்சரியப்பட்டாலும், இந்த நடவடிக்கையை இன்முகத்தோடு கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த கைது நடவடிக்கை பற்றி கூறுகையில் : இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி. ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்திருப்பது உண்மை என்றால், நீதிக்கு முன் எந்த செல்வாக்கும் செல்லாது என்று நிரூபனம் ஆகியுள்ளது. விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த நன்மையும் இல்லை, ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்கள், தங்களின் ஊதிய பாக்கிக்காக இன்றும் போராடும் நபர்களுக்கு இது நிச்சயம் நல்ல நாள்" என்று தெரிவித்தார்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியரான நரேந்திரநாத் விஜய் மல்லையா கூறுகையில், "எப்படியும் எங்களுக்கு எங்களுடைய ஊதிய பாக்கி கிடைக்காது என்றாலும், விஜய் மல்லையாவை கைது செய்து நாடு கடத்தி வழக்கை சந்திக்கச் செய்வதே மகிழ்ச்சியான செய்தி தான்"
"மல்லையா வழக்கை லலித்மோடி விவகாரம் போல காலம்கடத்தாமல் செயல்பட்ட இந்திய அரசுக்கு நன்றி, லண்டன் தனக்கு பாதுகாப்பான இடம் என மல்லையா நினைத்தார், ஆனால் இப்போது நீதி வென்றுள்ளது" என்று மகிழ்கிறார் நரேந்திர நாத்.
ஆனால் ஊழியர்களின் சந்தோஷம் நிலைக்காதவகையில் கைதான சில மணி நேரங்களிலேயே விஜய் மல்லையாவிற்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால் ஊழியர்களின் மகிழ்ச்சி சிறிது நேரத்தில் மாயமாகிவிட்டது.