உள்ளாட்சி இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பாமக ஆதரவு
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘'தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் பா.ம.க. போட்டியிடாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதாக் கட்சியின் கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜகவை ஆதரிக்க டாக்டர் ராமதாஸ், அன்புமணி இராமதாசு ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் அக்கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்''என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்கனவே மதிமுக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கூட்டணிக் கட்சியில் இருந்த மற்றொரு கட்சியான பாமகவும் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் களத்தில் ஆளும் கட்சியான அதிமுக போட்டியிடுகிறது. திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. கம்யூனிஸ்ட்கள் சில இடங்களில் போட்டியிடுகின்றனர். கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுடன் முதன் முறையாக பாஜக களமிறங்குகிறது.