கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் கும்மாளம்... நாளை நேராக சட்டசபைக்கு வருகின்றனர்
கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்கள் நாளை நேரடியாக சட்டசபைக்கு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை: ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக பொழுதை கழித்து வரும் அதிமுக எம்எல்ஏக்கள் நாளை சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கூவத்தூரில் இருந்து நேராக சென்னை வர உள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்த தியான புரட்சி தமிழக அரசியலையே புரட்டி போட்டு விட்டது. அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓபிஎஸ் தலைமையில் 11 எம்எல்ஏக்கள், 11 எம்பிக்கள் இணைந்துள்ளனர். சசிகலா அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டிலும் பூந்தண்டலத்தில் உள்ள பண்ணை வீட்டிலும் அடைத்து வைத்துள்ளனர்.
சசிகலா ஆலோசனை
இரண்டு நாட்கள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். ஒருநாள் அவர்களுடனேயே தங்கினார். உச்சநீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இதனால் எம்எல்ஏக்கள் சோகமடைந்தனர்.
நீச்சல் குளத்தில் உற்சாகம்
இந்த நிலையில் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். இதனால் சோகமாக இருந்த எம்எல்ஏக்கள் குஷியடைந்தனர். ரிசார்ட் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
ராஜ்பவன் டூ கூவத்தூர்
அதே உற்சாகத்தோடு ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். வந்த வேகத்தில் அத்தனை பேரையும் எண்ணி மீண்டும் ரிசார்ட்டில் கொண்டு போய் வைத்துள்ளனர். எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
நாளை சட்டசபைக்கூட்டம் கூடுகிறது. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க கொறாட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 மணிக்கு எம்எல்ஏக்களின் ஆலோசனைக்கூட்டமும் நடைபெறுகிறது.
ஒரே குடும்பம்
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கூவத்தூரில் இருந்து சென்னை சட்டசபைக்கு நேராக வந்து பங்கேற்க உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார் கடந்த 9 நாட்களாகவே நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக பழகினோம் அதே மகிழ்ச்சியோடு நாளை அனைவரும் ஒன்றாக கூவத்தூரில் இருந்து சட்டசபைக்கு பங்கேற்க வருவோம் என்றும் கூறினார்.
கடந்த 10 நாட்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைபட்டிருந்த எம்எல்ஏக்கள் நாளை முதலாவது சுதந்திரமாக உலா வருவார்களா? தொகுதிகளுக்குச் சென்று மக்கள் பணியாற்றுவார்களா? பார்க்கலாம்.