நெருங்கும் லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் ஆணையம்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளை கவனிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 துணை கலெக்டர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல் கட்டமாக கலெக்டர்கள், எஸ்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. இறுதி வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிக்காக 14 துணை கலெக்டர்களையோ, சீனியர் தாசில்தார்களையோ நியமனம் செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு பணி ஒதுக்கப்படுகிறது.
இவர்கள் வாக்கு பதிவு அலுவலர்கள், ஊழியர்கள், வாக்குச் சீட்டுகள், தேர்தல் பணிகளுக்காக திட்டமிடுதல், தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதை கண்காணித்தல், எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரம் மேலாண்மை, தேர்தல் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி, செலவு கணக்கை கவனித்தல், தேர்தல் நன்னடத்தை விதிகளை செயல்படுத்துதல், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு, வாக்குப் பதிவிற்கான பிற உபகரணங்கள் மேலாண்மை, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர்கள், வேட்பு மனு தாக்கல், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட 14 பணிகளையும் கவனிக்க துணை கலெக்டர் அந்தஸ்தில் வருவாய் துறையினர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் இல்லாத பட்சத்தில் ஊரக வளர்ச்சி துறையினரை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் இயங்கும் தேர்தர் பிரிவு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.