ஜெயலலிதாவிற்கு என்ன சிகிச்சை கொடுத்தார் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்?
சென்னை : முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட், நுரையீரல் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணர் என்று லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனை கூறியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அதிமுகவினர் கடவுளாக நம்பியது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலைத்தான். மருத்துவர் ரிச்சார்டு கடுமையான சீழ் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு நிபுணர் என்பதும் தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் நிர்வாகிகளும், வாசலில் தொண்டர்களும் இரவு பகலாக காத்திருக்கின்றனர். சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.
[Read This: ஆளுநர் சொன்னதையே நம்பாமல் அப்பல்லோ போன திருமாவளவன், யார் சொன்னதும் நம்பியுள்ளார் பாருங்கள்! ]
முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க, லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பேல், கடந்த 29ம் தேதி வியாழக்கிழமை சென்னை வந்தார். வெள்ளிக்கிழமை முதல் ஜெயலலிதாவின் நுரையீரல் நோய் பிரச்னையை ஆராயத் தொடங்கினார். உயர்சிகிச்சை அளித்த அவர், ஜெயலலிதா இயல்பு நிலை திரும்பி வருவதால் ஞாயிறன்று நாடு திரும்பி விட்டார்.
நுரையீரல் அவசர சிகிச்சைப் பிரிவில் வல்லவரான ரிச்சர்ட் பேல், நோயாளிக்கு மூச்சுத்திணறல் எதனால் ஏற்படுகிறது? அதைத் தடுப்பதற்கு என்ன வகையான மருந்துகளைச் செலுத்தி உயிரிழப்பைத் தடுக்க முடியும்? எவ்வாறு நுரையீரலை பலப்படுத்தி நோயாளியைக் குணமாக்க முடியும்? என்று பல ஆய்வுகளை மேற்கொண்டவர். இவர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்னமாதிரியான சிகிச்சை அளித்தார் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
நுரையீரலில் நோய் தொற்று
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் நீர் சேர்ந்துள்ளது. அது குறையாமல் இருக்கவே அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைக் குறைப்பதற்குத் தேவையான மருந்துகளை லண்டனில் இருந்து தருவித்து அளித்திருக்கிறார். இதனால் ஓரளவு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் குழுவுடன் கலந்தாலோசித்து எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்து, மேலும் சில பரிசோதனைகள் செய்ய இவர் வலியுறுத்தினாராம்.
உயர் சிகிச்சை அளித்த ரிச்சர்ட்
ஜெயலலிதாவின் உடல்நிலையுடன் நுரையீரல் நோய் எப்படி ஒத்துழைக்கிறது என்று பரிசோதனை செய்தார் ரிச்சர்ட் பேல். அவர் தொடர்ந்து சிறுநீரகங்கள் செயல்படும் முறையையும் ஆராய்ந்துள்ளார். ரத்த மாதிரியில் கிரியேட்டின் அளவையும் ஆராய்ந்துள்ளார். புதிதாக நோய்த்தொற்று எதுவும் ஏற்பட்டிருக்கிறதா? நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று ரத்தத்தில் எதுவும் கலந்துள்ளதா? பிற பகுதிகளைத் தாக்கியுள்ளதா எனவும் கண்டறிந்தார். ரிச்சர்ட் ரத்தத்தையும், நுரையீரலையும் ஆராய்ந்து மருந்துகளைக் கொடுத்துள்ளார். அவர் கொடுக்கும் மருந்துகள் இதயத்தையும், கல்லீரலையும் பாதிக்காதவாறு அதற்கான சிறப்பு மருத்துவர்கள் கவனிப்பார்கள்.
இயல்பு நிலைக்கு திரும்பிய ஜெ.,
ஜெயலலிதாவின் சிறுநீரகச் செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளுறுப்புகளுக்குச் சிகிச்சையளித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து ஒரு மருத்துவக்குழு இயங்கிதான் முதல்வருக்கு மல்டிபிள் ஆர்கன் பெயிலியர் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளுறுப்புகள் செயலிழப்பது என்ற நிலை வராமல் பாதுகாத்து வருகிறார்கள். ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே ரிச்சர்ட் லண்டனுக்கு திரும்பியுள்ளார்.
விரைவில் வீடு திரும்புவார்
ஜெயலலிதாவின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒருமுறை எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆய்வு முடிவுகளுக்குத் தகுந்தவாறு சிகிச்சையை அளிக்கிறது மருத்துவக்குழு. ஜெயலலிதாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள், நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டிருந்தாலும் ஜெயலலிதாவிற்கு மூளை, இதயம் போன்றவை இயல்பாக இயங்குகின்றன. அதனால் அவர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்புவார்