சென்னை: மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்… ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை தொடர்ந்து கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் சிலரது வீடுகளில் மழைநீர் புகுந்தது. வடியாமல் தேங்கியிருந்த மழை வெள்ளத்தால் ஆங்காங்கே குளங்கள்போலக் காட்சியளித்தன.
வாகன ஓட்டிகள் சிரமம்
சென்னை அண்ணா சாலையில் இருந்து ராயப்பேட்டை செல்லும் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அண்ணா சாலையில்
அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை கட்டுமானங்களுக்குள் மழைநீர் புகுந்தது. மோட்டார் மூலம் நீரை வெளியேற்றியதால் அந்த பகுதியில் அதிகளவு சாலையில் தேங்கியதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் அண்ணா சாலையில் வாகனங்கள் செல்லமுடியாததால் பூத பெருமாள் கோவில் சாலை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார் பம்புகள் மூலம் ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வெள்ளநீர் ஓரளவு வடிந்தது.
வீடுகளுக்குள் தண்ணீர்
திருவல்லிக்கேணி பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் அசுதின்கான் தெருவில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆதாம் மார்க்கெட் பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.
சென்னை மெரினா கடற்கரையின் மணல் பரப்பில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தைப்பார்ப்பதற்கு ஏரி போல் காட்சியளித்தது.
மரங்கள் சாய்ந்தன
பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொரட்டூர் போன்ற பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலை, புரசைவாக்கம் டானா தெரு, அம்பத்தூர் எம்.டி.எச். சாலை உள்பட சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டன.
புறநகரில் பாதிப்பு
ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இங்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கி நின்றது. பரங்கிமலை, பழவந்தாங்கல், தில்லைகங்காநகர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் குளம் போல தேங்கியிருந்தது. உடனடியாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு போக்குவரத்து சீரானது.
ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படாததால் மழைநீர் தேங்கியது. பெருங்குடி, மடிப்பாக்கம், உள்ளகரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
திங்களன்றும் மழை
ஞாயிறன்று மதியம் முதல் ஓய்வெடுத்த மழை திங்களன்று அதிகாலை முதல் தொடங்கியது. தூறலாக பெய்தாலும், பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்களும், அலுவலகத்திற்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர்.
நிரம்பும் ஏரிகள்
தொடர்மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிறு காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் மழைநீர் 513 கன அடி, கிருஷ்ணா தண்ணீர் 112 கன அடி பூண்டி ஏரியில் நீர் இருப்பு 376 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரியில்
புழல்ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் நீர் இருப்பு 1520 மில்லியன் கன அடி. செம்பரம்பாக்கம் ஏரியில் 816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக தற்போது ஏரிக்கு 1240 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரியில் 163 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 23 கன அடி தண்ணீர் வருகிறது. மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. எனவே ஏரிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.