50 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மிக கன மழை: பிபிசி எச்சரிக்கை
சாதாரண மழைக்கே சென்னை தத்தளித்து வரும் நிலையில், பிபிசி வானிலை அறிக்கை சென்னை மக்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கன மழை கொட்டித் தீர்க்கும். வெள்ள அபாயம் உள்ளது என்று வானிலைக்கான பிபிசி செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.
பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
|
தமிழகம், கேரளாவில் மழை
இந்த நிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையளவில் கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அடுத்த சில நாட்களில் வெள்ளம்
மற்றொரு டிவிட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட, அளவுக்கு, மழையை கொண்டு வரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படும்
மேலும், அந்த டிவிட்டில் வெளியிடப்பட்ட படத்தில், 500 மில்லி மீட்டர் அளவுக்கு (50 செ.மீ) மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 500 மி.மீ மழை என்பது தென்கிழக்கு இந்தியாவின் எந்த பகுதியில் அல்லது இலங்கையின் எந்த பகுதியில் பெய்ய வாய்ப்புள்ளது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல ஒரே நேரத்தில் இவ்வளவு மழை பெய்யுமா, அடுத்த சில நாட்களில் படிப்படியாக இவ்வளவு மழை பெய்யுமா என்பதும் விளக்கப்படவில்லை.
ஒருமழைக்கே இப்படி
சாதாரண மழைக்கே சென்னை தத்தளித்து வரும் நிலையில், பிபிசி வானிலை அறிக்கை சென்னை மக்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. இயற்கையை துல்லியமாக கணிக்க முடியாது என்பார்கள். அதேபோல பாதிப்பின்றி இந்த மழை கடந்து செல்ல வேண்டும் என்பதே மக்களின் வேண்டுதலாக உள்ளது.