வெற்றிக் கொண்டாட்டத்துடன் 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு!
சென்னை: தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அதிமுக அரசு வெற்றிகரமாக மூன்றாண்டுகளை நிறைவு செய்து இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சாதாரண நாளாக இருந்தால் முன்னூறு ஆண்டு பேசும் மூன்றாண்டு சாதனை என்று நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்திருக்கும்.
லோக்சபா தேர்தல் நேரமாக இருப்பதால் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் சத்தமில்லாமல் மூன்றாண்டு நிறைவு செய்துள்ளது அதிமுக அரசு.
ஆனாலும் லோக்சபா தேர்தலில் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியோடு நான்காம் ஆண்டிற்குள் அதிமுக அரசு அடியெடுத்து வைக்கிறது.
பிரச்சினைகள் சவால்கள்
மின்வெட்டுப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என்ற மிகப்பெரிய சவாலோடு 2011ம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. வந்த உடன் பேருந்து கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டது.
மின்கட்டண உயர்வு
மின்கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இல்லாத மின்சாரத்திற்கு எதற்கு கட்டண உயர்வு என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.
போராட்டங்கள்
கட்டண உயர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவிற்கு எதிராக இந்த கட்டண உயர்வுகளே முன்வைக்கப்பட்டன.
சாதனைகள்
ஆனாலும் விலையில்லா பொருட்கள், ஆடு மாடுகள், அம்மா உணவகம், காவிரிநதிநீர் பிரச்சினையில் கிடைத்த வெற்றி, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் ஜெயலலிதா மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகள் மக்களை கவர்ந்துள்ளன.
மூவர் தூக்குக்கு எதிராக
பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், 7 தமிழர்களை விடுதலை செய்யவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஜெயலலிதா அரசின் சாதனைகளாக தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டது.
துணிச்சல் லேடி
கூட்டணி எதுவும் இன்றி தனித்து போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்று சவால்விட்ட எதிர்கட்சியினருக்கு பதில் சொல்லும் விதமாக அதிமுக இந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது.
பரிசளித்த தமிழக வாக்காளர்கள்
அதிமுக அரசுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, பாமக என பல கட்சியினர் களமிறங்கினர். ஆனாலும் அவற்றை காதில் போட்டுக்கொள்ளாமல் அதிமுக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பரிசளித்துள்ளனர்.
4ம் ஆண்டில் அதிமுக அரசு
இந்த வெற்றிக் கொண்டாட்டத்துடன் அதிமுக அரசு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளில் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. தன்முன் உள்ள சவால்களை வென்று மீண்டும் சாதிப்பாரா ஜெயலலிதா?.