காவேரி மருத்துவமனையில், கடுப்பேற்றும் திமுக நிர்வாகிகளை 'தெறிக்கவிடும்' அழகிரி!
Recommended Video
சென்னை: காவிரி மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி தனது மனைவியுடன் தங்கியிருந்து தனது தந்தை கருணாநிதி உடல்நிலை குறித்து அவ்வப்போது விசாரித்து வருகிறார்.
அழகிரிக்கும், அவர் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கும் நடுவே பேச்சுவார்த்தை இல்லாத சூழல் நிலவி வந்தது. ஆனால், இப்போது கருணாநிதி உடல் நலிவடைந்த பிறகு, சகோதரர்கள் பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சென்னை வந்த அழகிரி, கோபாலபுரம் இல்லத்தில் தனது தந்தையை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அழகிரி மனைவி, காந்தி, மகன் தயா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
மருத்துவமனைக்கு அழகிரி சென்றார்
அன்றைய தினம் இரவு, கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டதால், காவிரி மருத்துவமனையில், கருணாநிதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கருணாநிதியுடன் காவிரி மருத்துவமனை சென்றனர். அழகிரியும் சென்றிருந்தார்.
ஸ்டாலின், அழகிரி பேச்சுவார்த்தை
இதன்பிறகு, ஸ்டாலின் மற்றும் அழகிரி இருவருமே, தங்கள் தந்தை உடல் நலம் குறித்து சில விஷயங்களை விவாதிக்க வேண்டிய நிலைக்கு வந்தனராம். லண்டனிலுள்ள தனக்கு தெரிந்த, ஒரு டாக்டர் குறித்து ஸ்டாலினிடம் அழகிரி எடுத்துரைத்துள்ளார். அப்போது அந்த டாக்டர் உதவியை நாட யோசிக்கலாம் என ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிண்டு முடிந்த சிலர்
அண்ணன், தம்பி இப்படி ஒற்றுமையாக உள்ளது தெரியாமல், வழக்கம்போல இருவருக்கும் நடுவே சிண்டு முடிவதிலும் சிலர் சீரியசாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நோஸ் கட் வாங்கியுள்ளனர். கட்சியின் முதன்மைபதவியில் இருக்கிற முன்னாள் அமைச்சர் ஒருவர், நீங்க இப்படியே மதுரை போய்விடாதீர்கள். ஸ்டாலினை ஏமாற்றிவிடுவார்கள் என அழகிரியிடம் கூற, அழகிரி கோபத்தில், என்னய்யா கிள்ளி விடுறியா என கேட்டாராம். முகம் சுருங்கிப்போன அந்த நபர் அங்கேயிருந்து நழுவியுள்ளார்.
இருதரப்பிடமும் கனிமொழிக்கு பாசம்
கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அன்றைய தினம் இரவு, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மாடியிலுள்ள அறைக்குள் வர முற்பட்டுள்ளார். அவரை வெளியே போகுமாறு கூறிவிட்டாராம் அழகிரி. இதனால் அவர் ஸ்டாலினுடன் மட்டுமே இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், தலையில் பூ வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தபோது, இது என்ன பிக்னிக் இடமா என கடிந்து கொண்டாராம் அழகிரி. அழகிரியாகட்டும், ஸ்டாலினாகட்டும், இருவருமே சமமாக அன்போடு பழகுவது கனிமொழியிடம் மட்டும்தான். இருவரிடமுமே எளிதில் பழக கூடியவராக கனிமொழி இருப்பதை பார்க்க முடிகிறது.
தலைவர் உடல்நிலைதான் முக்கியம்
மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோது, திமுக நிர்வாகி ஒருவர் கதறி அழ, அடுத்த நாளே, தயா அழகிரி, அந்த நிர்வாகியிடம் சென்று, அழகிரியும், ஸ்டாலினுமே அழாமல் இருக்கும்போது நீங்க என்ன ரொம்ப ஓவரா போறீங்க. இந்த பக்கம் வரக்கூடாது என கூறிவிட்டதாகவும், அதன்பிறகு மருத்துவமனைக்குள் அந்த நிர்வாகியை பார்க்க முடியவில்லை என்றும் திமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அழகிரி எங்களை கலாய்க்கிறார் என ஆதரவாளர்கள் ஸ்டாலினிடம் சென்று முறையிடுவதாகவும், இப்போது தலைவரின் உடல்நிலை மட்டும்தான் எனக்கு முக்கியம். கொஞ்சம் பொறுத்து போங்க என ஸ்டாலின் கூறி அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.