தலைவரை சந்தித்ததற்கு நன்றி.. பொன்னாருக்கு போன் போட்ட மு.க.அழகிரி
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தற்கு முன்னாள் அமைச்சரும், மூத்த மகனுமான மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை: சென்னைக்கு வந்தபோது திமுக தலைவர் கருணாநிதியையும், தாய் தயாளு அம்மாளையும் சந்தித்ததற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மு.க. அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
தினத்தந்தியின் பவள விழா மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரியின் மகள் திருமண விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தார்.
இந்த விழாக்களை முடித்துக் கொண்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் ஓய்வெடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறும் மோடி அழைப்பு விடுத்தார். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியையும், தாய் தயாளு அம்மாளையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் அழகிரி.