கன்னித்தீவு கதைகள் போல் தொடரும் வருமான வரித் துறையினரின் சோதனைகள்- மு.க. ஸ்டாலின் சரமாரி சாடல்
தமிழகத்தில் இதுவரை நடந்த ரெய்டுகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கன்னித்தீவு கதைகள் போல் வருமான வரித் துறையினரின் ரெய்டுகள் தொடர்கின்றன என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படும் ஒன்று என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
|
மத்தியில் பாஜக ஆட்சி வந்தவுடன் தொடர்ந்து கரூர் அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டு, திருப்பூரில் கன்டெய்னரில் ரூ.570 கோடி பணம் சிக்கிய விவகாரம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த ரெய்டு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் வீடுகளில் நடத்திய ரெய்டு, தலைமை செயலாளராக இருந்த ராம் மோகனராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும், அவரது உறவினர்கள், மகன் வீடுகளில் நடந்த ரெய்டு, மணல் மாபியா சேகர் ரெட்டி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் வீட்டில் நடந்த ரெய்டு, நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததார் தியாகராஜன் வீட்டில் நடந்த ரெய்டு, நாமக்கல் கான்டிராக்டர் சுப்பிரமணியத்தின் வீட்டில் ரெய்டு, குட்கா குடோன்களில் நடந்த ரெய்டு ஆகியவை வருமான வரித் துறை மூலமாகவே நடைபெற்றுள்ளது.
இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல்தான் ஜெயா டிவி உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது. தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு கதை போல் வருமான வரித் துறையினரின் ரெய்டுகள் தொடர்கின்றன.
இந்த ரெய்டுகளின் நடவடிக்கை என்பது குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் கேட்டு செய்தியாளர்களாகிய நீங்கள் விளக்கம் பெறுங்கள். அதன் பிறகு நான் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.