இரட்டை இலையை பார்த்து திமுக பயப்பட்டது இல்லை.. பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டும் ஸ்டாலின்
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பார்த்து திமுகவுக்கு பயமில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சபாநாயகர் தனபாலுக்கு எதிராக, சட்டசபையில் திமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு முறியடிக்கப்பட்ட நிலையில், பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடைந்த பிறகு, சபைக்கு வந்த சபாநாயகர் தனபால், அனைத்து உறுப்பின ர்களின் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இனியாவது அவர் அப்படி நடப்பார் என நம்புகிறோம் என்றார்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஆர்.கே.நகரில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா என்ற நிருபர்களின் கேள்விக்கு, "இரட்டை இலை சின்னத்தை திமுக எதிர்க்க அஞ்சுவதை போல ஊடகங்கள் செய்தி பரப்புவது சரியில்லை. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இரட்டை இலை சின்னத்தை உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களில் திமுக தோற்கடித்துள்ளது.
அதே இரட்டை இலையை தோற்கடித்துதான் திமுக ஆட்சிக்கே வந்தது. சமீபத்தில் விளவங்கோடு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவர் டெபாசிட் இழந்தார். பர்கூரில் 3வது இடத்துக்கு போனது. எனவே இரட்டை இலையை வைத்து நாங்கள் வெற்றி வாய்ப்பை கணிப்பதில்லை" என்றார் ஸ்டாலின்.