மக்கள் பிரச்சனையை எடுத்துக்கூறும் வகையில் சட்டமன்றம் நடைபெற வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: மக்கள் பிரச்சனையை எடுத்துக் கூறும் வகையில் சட்டமன்றம் நடைபெற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
''சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு'' என்ற தலைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகில் திங்கள்கிழமை மாலையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், அதிமுக ஆட்சியில் நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.
நீதித்துறைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காத நிலை அதிமுக ஆட்சியில் உள்ளது. சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் பொதுவானவராக செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சனை என்று வந்தபோது ஆளுங்கட்சிக்கு திமுக முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்ற தீர்மானம் வந்தபோது அதை நிறைவேற்ற ஆதரவு அளித்தோம்.
காவல்துறை மானியம் சட்டசபையில் 22ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஜெயலலிதா பதில் உரை ஆற்றப்போகிறார். பதிலுரை ஆற்றுகிறபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்தால் கேள்வி கேட்பார்கள். அப்போது ஜெயலலிதாவுக்கு ஆத்திரம் வரும். ஆகவே அதனை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு திமுக உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளே இல்லாமல் காவல்துறை மானியத்தை தாக்கல் செய்து, ஒப்புக்காக ஒன்றிரண்டு பேரை பேசவைத்து ஜெயலலிதா பதிலுரை ஆற்றியிருக்கிறார். பதிலுரை ஆற்றும்போது என்ன ஆணவம், திமிறு. என்ன கர்வம், கருணாநிதியை பார்த்து கேட்கிறார். ஏன் இங்கு வந்து பேசுவதற்கு தைரியமில்லை என்று கேட்கிறார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நீங்கள் (ஜெயலலிதா) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தீர்கள். அப்போது அவையில் தன்னந்தனியாக பேசினீர்கள். இல்லை என்று மறுக்கவில்லை. ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் பேசினீர்கள். ஆனால் ஜனநாயக முறைப்படி பேச வைத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. நீங்கள் பேசிய பேச்சு அனைத்தும் அவை குறிப்பில் இருக்கிறது. மக்கள் பிரச்சினையை எடுத்துக் கூறும் வகையில் சட்டமன்றம் நடைபெற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.