திமுகவினருக்கு உற்சாக செய்தி... விரைவில் வீடு திரும்புகிறார் கருணாநிதி: ஸ்டாலின்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி நலமடைந்து வருவதாகவும் அவர் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டார். அவரது உடல் சோர்வடைந்த காரணத்தால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
மருத்துவக் குழுவினர் அளித்து வரும் சிகிச்சையில் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார். மு.க. ஸ்டாலின், செல்வி, கனிமொழி எம்.பி., ஆகியோர் கருணாநிதியின் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.

கனிமொழியிடம் நலம் விசாரிப்பு
கருணாநிதி உடல்நிலை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி போனில் கனிமொழி எம்.பி.யிடம் கேட்டறிந்தார். அவர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவது பற்றிய விருப்பத்தையும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் கனிமொழியிடம் தொலைபேசியில் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

ஸ்டாலினிடம் விசாரிப்பு
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. வின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

திருநாவுக்கரசர் வாழ்த்து
மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, திண்டுக்கல் ஐ.லியோனி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதய ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோரும் உடல்நலம் விசாரித்தனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினர்.

பார்வையாளர்கள் தவிர்க்க கோரிக்கை
கருணாநிதி நலமடைந்து வருவதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று ஸ்டாலினும், கனிமொழியும் கூறியுள்ளனர். கருணாநிதியை காண பார்வையாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications