சசிகலா குடும்பமே கட்சியை நடத்துகிறது.. மதுசூதனன் கொந்தளிப்பு !
சசிகலா குடும்பம் தான் கட்சியை நடத்துகிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா மட்டும் கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவரது குடும்பமே கட்சியை நடத்துகிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சகிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனிடையே அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் கூறுகையில், சசிகலாவை நான் தான் ஆதரித்தேன். சசிகலா கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவரது குடும்பமே கட்சியை நடத்துகிறது. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு சில அவமானங்கள் இழைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். பொருளாளருக்கே இந்த நிலைமை என்றால், நாளைக்கு எனக்கும் அதே நிலை நடக்கும் என்று நினைத்தேன்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருந்து வருகிறேன். அதனால் தான் கட்சியை காப்பற்றனும் என்ற நோக்கத்தோடு வெளியேறினேன், அதிமுகவுக்காக 49 வழக்குகளை சந்தித்துள்ளேன். நியாயம் நடக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பொறுந்திருந்து பாருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications