கிரானைட் மோசடி: சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு தேவை – டிராபிக் ராமசாமி மனு
சென்னை: கிரானைட் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்தும் விசாரணை நடத்தி இந்த உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
மதுரையில், கிரானைட் குவாரிகள் நடத்தியவர்கள் சட்டவிரோதமாக அரசு நிலங்களில் உள்ள கிரானைட்டுகளை வெட்டி எடுத்துள்ளனர். அனுமதியின்றி கிரானைட் குவாரிகளையும் நடத்தியுள்ளனர். இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத செயல்களின் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி வரை தனிநபர்கள் சம்பாத்தியம் செய்துள்ளனர். எனவே, இந்த சட்டவிரோதமாக சம்பாத்தியம் செய்த பணம் மற்றும் சொத்துக்களை மத்திய அமலாக்கப்பிரிவு முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
அதேபோல, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தாது மணல் உள்ளது. இந்த தாது மணல் அள்ளியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது.
எனவே, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாது மணல் குவாரிகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யவும், இந்த குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்தும் விசாரணை நடத்தி இந்த ஐகோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.