நேற்று சென்னை டிராபிக் ஜாமில் நானும் சிக்கினேன்... உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் வேதனை
சென்னை: சென்னையில் நேற்று பெய்த பேய்மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் தாமும் சிக்க நேரிட்டதாகவும் இதனை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. பல மணிநேரம் நீடித்த மழையால் சாலைகளெங்கும் வெள்ளக்காடாகின. பணிமுடித்துவிட்டு வீடு திரும்ப முடியாமல் நள்ளிரவைத் தாண்டியும் சென்னைவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கவே பல மணிநேரம் என்ற நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு, போக்குவரத்து நெரிசலைத் தடுக்க சென்னை போலீசார் தவறிவிட்டதாக தலைமை நீதிபதி கவுலிடம் முறையிட்டார்.
அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கவுல், போக்குவரத்து நெரிசலில் நேற்று மாலை நானும் சிக்கிக் கொண்டேன். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாம் இயற்கை வளங்களை அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.