சுவாதி கொலை: பிலால் உள்ளிட்ட 6 பேரின் ரகசிய வாக்குமூலம் எழும்பூர் கோர்ட்டில் இன்று தாக்கல்..!
சென்னை: ஐ.டி நிறுவ பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் அவரது நண்பர் முகமது பிலால் உள்ளிட்ட 6 பேரது ரகசிய வாக்குமூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமாரை வீடியோ பதிவு செய்ய காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ல் அதிகாலையில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது.
சுவாதி கொலை செய்யப்பட ஒரு தலைக்காதலே காரணம் என தெரிவித்த போலீஸ், சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் உதவியுடன் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ராம்குமரை கைது செய்தது. தொடர்ந்து காவலில் எடுத்து விசாரணை மற்றும் அடையாள அணிவகுப்பு போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்ட ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக, கொலை நடந்தபோது ரயில் நிலையத்தில் நின்றிருந்த 3 பேர், சுவாதி நண்பர் முகமது பிலால் மற்றும் தோழிகள் 5 பேர் உட்பட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிலால் மற்றும் சுவாதியின் தோழிகள் 6 பேரிடம் நீதிபதி முன்பு சனிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு பிலால் மற்றும் சுவாதியின் தோழிகள் 6 பேர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி பிரகாஷ் விசாரணை நடத்தினார். பின்னர் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 6 பேர் அளித்த ரகசிய வாக்குமூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சுவாதி கொலை வழக்கை பொறுத்த வரை செல்போன் பதிவுகள், சிசிடிவி பதிவு உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தான் உள்ளன. அடுத்தகட்டமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.
உயர்நீதிமன்றம் மறுப்பு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை ஏற்கெனவே போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் ராம்குமாரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி வாங்கியுள்ளனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமாரை வீடியோ பதிவு செய்ய காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராம்குமாரை வீடியோ பதிவு எடுக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த அனுமதியை எதிர்த்து ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். அப்போது, வழக்கு பட்டியலில் வந்த பிறகு விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.