ஜெயலலிதாவுக்கு போட்ட ஹெலிபேட்... 10 ஆண்டுகளாக பண பாக்கி: அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: ஜெயலலிதா வருகைக்காக தஞ்சாவூரில் பத்தாண்டுகளுக்கு முன் ஹெலிபேட் அமைத்த பணத்தை வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டையைச் சேர்ந்த பீட்டர் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக 9.9.2005ல் தமிழக முதல்வர் (அப்போதைய முதல்வர் ஜெயலலிதா) தஞ்சாவூர் வந்தார். இதற்கு 15 நாள் முன்னதாக பொதுப்பணித்துறை நிர்வாக அதிகாரி மற்றும் உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என்னிடம் கேட்டுக் கொண்டபடி, ஹெலிபேட் தளம், விழா மேடை வரை சாலை வசதிகள் மற்றும் தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்தேன். ஆனால் இதற்குரிய பணம் எனக்கு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரியை தொடர்பு கொண்டும் பலனில்லை. இதன் பிறகு கடந்த 28.5.2011ல் மீண்டும் மனு அளித்தேன். பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக அதிகாரி பதிலளித்தார். ஆனாலும் வழங்கப்படவில்லை.
கடந்த ஜூலை 4ம் தேதியும் மனு அளித்தேன். அப்போதும் நடவடிக்கை இல்லை. எனவே, எனக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘மனுதாரரின் மனுவை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பொதுப்பணித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிசீலித்து 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.