மாணவர்கள் போராட்டம்: சென்னை பல்கலை. அரசியல் துறை தலைவர் பொறுப்பில் இருந்து ராமு மணிவண்ணன் நீக்கம்!
சென்னை: மதுவிலக்குப் போராட்டதில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த தகவல்களை அளிக்க மறுத்ததால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து பேராசிரியர் ராமு மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுவிலக்கு கோரி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டியலை அளிக்குமாறு பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டிருந்தது.
ஆனால் மாணவர்கள் பட்டியலை அவர் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் பேராசிரியர் ராமு மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கே.எஸ். ராதாகிருஷ்ணன்
இதற்கு தற்போது பல்வேறு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தமது முக நூல் பக்கத்தில், எதையும் நுண்மான் நுழைபுலத்தோடு அணுகும் பேராசிரியர். மணிவண்ணன் அவர்களை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.
இதைக்குறித்து அவருடைய நலம்விரும்பிகள், பல்கலைக் கழக வேந்தரான ஆளுநரிடம் மனு கொடுக்கவும், இந்த இழிசெயலைத் தட்டிக் கேட்கவும் முடிவுசெய்துள்ளோம். இதில் பங்கேற்பவர்கள் தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கவும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் உரிய ஆய்வுகள் செய்து, அதனுடைய வரலாற்று ரீதியான படைப்புகளைப் பலரிடம் பெற்று ஆவணப்படுத்தியவர் பேராசிரியர். மணிவண்ணன். அற்புதமான விவாதங்களை நாட்டின் நலனைக் கருதி, தொலைக்காட்சிகளை அவர் முன்வைப்பதைப் பலர் கண்டிருக்கலாம். தகுதியானவரை, தகுதியற்றவர்கள் சூறையாடுவதைத் தடுக்க வேண்டாமா? தகுதியே தடை என்ற செயல்முறையை தகர்ப்போம். அனைவரும் பங்கெடுப்போம் இந்த அநீதிக்கெதிரான நடவடிக்கையில் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான பூங்குழலி, மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மிரட்ட ஒவ்வொரு துறைக்கும் உத்தரவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். அவ்வாறு செய்ய மறுத்த அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிவண்ணனை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது நிர்வாகம்.
தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும் பேராசிரியர் மணிவ்ண்ணனை பழிவாங்க நினைக்கிறதா நிர்வாகம்? உலக அளவில் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியை, மியன்மா, நேபாளம், ஈழம், திபெத் மக்களின் போராட்டங்களில் அவர்களுடன் நின்று முக்கியப் பங்காற்றும் ஒருவர் சென்னைப் பல்கலக்கழகத்தில் பணியாற்றுவது பல்கலைக்கழகத்துக்கே பெருமை. அவரின் அருமையை உணராமல் அவமதிக்கும் சென்னைப் பல்கலைகழக நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்போம் என்று பதிவு செய்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறுகையில் மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டியலை அளிக்காத காரணத்தாலேயே நான் பதவி விலகச் செய்யப்பட்டுள்ளேன். எனக்குப் பதிலாக சமகால படிப்புகளுக்காக ராஜீவ் காந்தி என்ற துறையின் பொறுப்பிலிருந்த கோடேஸ்வர பிரசாத், தற்போது அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னிடம் எவ்வித விளக்கத்தையும் கேட்காத பதிவாளர் பொறுப்பை கோடேஸ்வர பிரசாத்திடம் ஒப்படையுங்கள் என்று மட்டும் கூறினார் என்றார்.
இதற்கு முன்னரும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணணுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கைப் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார் ராமு மணிவண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.