மதுரை நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கும் கட்சிகள்
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த வாய்ப்பை மீண்டும் பெற பாரதிய ஜனதாவும் இப்போதே தேர்தல் வியூகம் அமைக்க தொடங்கி விட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி தேசிய கட்சிகளுக்கு ‘செக்' வைக்கும் முயற்சியை மாநில கட்சிகளும் தொடங்கி விட்டனர். இதனால் தேர்தல் களம் தற்போதே சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
மதுரையில் யார்?
எந்த கட்சி யாருடன் கூட்டணி, வெற்றி-தோல்வி கணக்குகளும் அரசியல் கட்சிகள் கணிக்க தொடங்கி விட்டனர். முக்கிய தொகுதியில் வேட்பாளராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள மதுரை தொகுதியிலும் போட்டியிடப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘கை’ப்பற்றிய மதுரை
மதுரை தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 8 தடவையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட மதுரை காங்கிரசார் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்வாங்கிய காங்கிரஸ்
முன்னாள் எம்.பி. ராம்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில் கூட்டணி ஒப்பம் காரணமாக சிலர் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதிமுகவின் கணக்கு
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதுரை தொகுதியில் இந்த முறை கட்டாயம் போட்டியிட வேண்டும் என்றும், இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மதுரையில் முதல் வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது. இதற்காக வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சீட் கேட்டு கட்சி தலைமையிடத்தில் வருகிற 19-ந்தேதி மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
விலகிய அழகிரி
மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மீண்டும் இந்த தேர்தலில் குறிப்பாக மதுரை தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கட்சி தலைமை உத்தரவுக்கு ஏற்ப கடைசி நேரத்தில் யோசித்து முடிவு எடுக்கலாம் என்று மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சீட் கேட்கும் திமுகவினர்
ஆனாலும் தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் செ..ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘சீட்' கேட்க முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியும்
இதுவரை 3 தடவை மதுரை தொகுதியை கைப்பற்றியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இந்த முறை போட்டியிட ஆர்வமாக உள்ளது. கூட்டணியில் மதுரை தொகுதியை கேட்டு பெற மாநில நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.
தா.பாவின் இலக்கு
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார். அவர் அ.தி.மு.க. கூட்டணியில் மதுரை தொகுதியை கேட்டு வருகிறார்.
சுப்ரமணியசுவாமி குறி
மேலும் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி வெற்றி பெற்றார். இந்த தடவை பாரதிய ஜனதா சார்பில் அவர் மதுரை தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.
மதிமுகவுக்கும் ஆசை
மேலும் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர வியூகம் வகுத்து வரும் ம.தி.மு.க.வும் மதுரையை குறி வைத்துள்ளது.
பிரேமலதாவின் கணக்கு
தே.மு.தி.க.வை பொறுத்தவரை கூட்டணி எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில் மதுரை தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை மதுரையில் நிறுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மியும் போட்டி
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியினரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி கூறினார். மதுரை, கரூர், கோவை உட்பட 12 மாவட்டங்களில், கட்சி அமைப்புகள் உள்ளன. எனவே மதுரை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடங்கிய அதிமுக
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை அ.தி.முக. பொதுச் செயலாளரும், முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தொடங்கி விட்டார். 40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர்.
தனித்து போட்டி
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் நிர்வாகிகள் உற்சாகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திமுகவும் தனிமை
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. எனவே அழகிரி போட்டியிடாத பட்சத்தில் மதுரை தொகுதியை யாருக்கு கொடுப்பது என்பதில் போட்டி ஏற்படும்.
மதுரை தொகுதி யாருக்கு?
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு எதுவுமே இன்னும் முற்று பெறாத நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரை தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.