படிப்படியாக தனது மூச்சை நிறுத்தும் மதுரை சிந்தாமணி..!
மதுரை: மதுரை மக்களின் ஒரு முக்கிய அடையாளம் சினிமா ரசனை. சினிமாவை ரசிக்காத, ரசிக்க முடியாத மக்களை மதுரையில் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட மதுரையில் சினிமா தியேட்டர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.?
மதுரையில் உள்ள ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கும். ஒவ்வொரு தியேட்டர் குறித்தும் பக்கம் பக்கமாக பேசிச் சிலாகிக்கக் கூடிய அளவுக்கு கதைகள் இருக்கும்.

அப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றுதான் சிந்தாமணி. அம்சவல்லி பவனில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது உடைபட்டுக் கொண்டிருக்கிறது.
மதுரை கீழ வெளி வீதியின் முக்கிய அடையாளம் சிந்தாமணி. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி முதல் மூன்று முடிச்சு, பாயும் புலி என எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களைப் பார்த்த தியேட்டர் இது.
சிந்தாமணி தியேட்டர், மதுரை :-( pic.twitter.com/06KquRvMtV
— yathirigan (@yathirigan) October 16, 2016
முந்தானை முடிச்சு வந்தபோது இந்தத் தியேட்டரில் கட்டி ஏறிய கூட்டம் பலரது கண்களை விட்டு இன்னும் அகலாமல் உள்ளது. மதுரை மக்களின் திரை ரசனைக்கு சரியான தீனி போட்ட தியேட்டர்களில் இதுவும் ஒன்று.
ஒவ்வொரு தியேட்டராக அழிந்து வரும் மதுரையில் தற்போது சிந்தாமணியும் மூடு விழா கண்டு விட்டது. இப்போது முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
சிந்தாமணியின் அழிவை மதுரை மக்கள் சோகத்துடனும், ஏக்கத்துடனும் பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications