மதுரை சித்திரைத் திருவிழா: மே10ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய அம்சமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 10ம் தேதி நடைபெறும்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு மே 1ம் தேதி திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இதனை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபமும், அதைத் சுற்றிய பகுதிகளும் மலர் பந்தல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கம்பத்தடி மண்டபத்தில் உள்ள 59 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் வெள்ளை நிற ரிஷபக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதை அடுத்திருந்த பலிபீடத்துக்கும், அதிகார நந்திக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
சித்திரைத் திருவிழாவுக்காக காப்புக் கட்டியிருந்த காலாஸ் பட்டருடன், ஸ்தானிக அர்ச்சகர்களும் சேர்ந்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். கொடிமரத்துக்கு 2 பெரிய மற்றும் 8 சிறிய கலசங்களில் புனித நீர் வைத்து பூஜை செய்யப்பட்டது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
சுவாமி பிரியாவிடையுடனும், அம்மனும் பல்லக்கில் கம்பத்தடி மண்டபம் முன்பு எழுந்தருளினர். அம்மன், பிரியாவிடை வாடாமல்லி நிற ஆடை அணிந்திருந்தனர். சுவாமி வெள்ளைப் பட்டாடை அணிந்திருந்தார்.
வைர கிரீடம், வைர கொண்டை
அம்மன், சுவாமி வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்திருந்தனர். பிரியாவிடை வைரக் கொண்டை அணிந்திருந்தார். அம்மன் பச்சை மரகதக்கல் பதிக்கப்பட்ட மற்றும் பவளமாலை உள்ளிட்டவை அணிந்திருந்தார்.
ரிஷபக்கொடியேற்றம்
சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், காலை 10.39 மணிக்கு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர், கொடிமரத்தின் அடிப்பகுதியில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை மூலம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்தில் பட்டு வேஷ்டியும், ஊதா நிற துண்டும் அணிவிக்கப்பட்டது.
பின்னர், கலசங்களின் புனித நீர் கொடிமரத்தின் கீழ் ஐந்து பக்கங்களிலும் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
மலரபிஷேகம்
50 அடி உயர மாலைகள் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டன. மலர் பூஜையின்போது 7 வகை மலர்கள் தூவப்பட்டன. இதனால் அப் பகுதியே மலர் வாசனையால் மணம் வீசியது. தர்ப்பணப் புல் கட்டப்பட்டிருந்தது. பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். பின்னர்பல்வேறு வகை தீபாராதனைகள் காட்டப்பட்டன. மாலையில் சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெற்றது.
மே 10ல் திருக்கல்யாணம்
சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான திருக்கல்யாணம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது என கோவில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் தெரிவித்தார். இதில் 6 ஆயிரம் பேர் இலவசமாக தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். குளிர்சாதன வசதி, பெரிய திரையில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் பார்க்கும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
மே 11ல் சித்திரை தேரோட்டம்
நகரில் மழை பெய்து மக்கள் மகிழ்ந்த நிலையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. வருண ஜபம் நடந்த மறுநாள் மழை பெய்திருப்பது சிறப்பானது என்று கூறிய அவர், மே 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்றார்.