ஜனவரி 14,15,16ல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சீறி வரும் காளைகளின் ஜல்லிக்கட்டு!
மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். இந்த முறை ஜல்லிக்கட்டுக்கான நேரம் கூடுதலாக 1 மணி நேரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வீரராகவராவ் கூறியதாவது : ஜல்லிக்கட்டு போட்டிகளை எந்தெந்த நாட்களில் நடத்தலாம் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, சுற்றுலாத்துறையினர், கிராம விழாக்குழுவினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை பின்பற்றும விதமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளோ, வீரர்களோ எந்த வித துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகள் 4 அடி உயரம் 3 வயது இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
காளைகளை பரிசோதிக்க 10 சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குழுவிலும் 6 கால்நடை மருத்துவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அனத்து காளைகளுக்கும் முன்கூட்டியே பரிசோதனைக்கான டோக்கன் வழங்கப்படும். தகுதியான காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்.

ஜனவரியில் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு விதிகள் அனைத்தும் விழாக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ல் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலமேட்டில் ஜனவரி 15 மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 16ல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

வீரர்களுக்கும் சோதனை
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்கவும் 10 மருத்துவக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆம்புலன்ஸ், மொபைல் மருத்துவ சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக 1 மணி நேரம்
ஜல்லிக்கட்டுக்கான நேரம் இந்த ஆண்டு 1 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடக்கும், இந்த முறை 3 மணி வரை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications