மதுரையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்.. குடத்துடன் தெருத் தெருவாக அலையும் மக்கள்!
மதுரை: என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்ற வசனம் இப்போது வரை மதுரை மக்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. மதுரையில் கோடை காலம் இன்னும் உச்சத்தை எட்டாத நிலையில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.
மக்கள் குடிநீருக்காக குடத்துடன் தெருத் தெருவாக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் எப்போது வரும் என்பதே தெரியாத நிலை.
லாரிகளில் விற்கப்படும் குடிநீரை காசு கொடுத்து விலைக்கு வாங்கிக் குடித்து , குடித்தனம் நடத்தும் நிலைக்கு மதுரை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீர்ப் பஞ்சத்தின் தலைவிரி ஆட்டம்
மதுரையில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர்ப் பஞ்சம் கடுமையாக இருப்பதாக மதுரை மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை
மாநகராட்சி குடிநீர் சரிவர விநியோகம் இல்லை. ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருவதாக மக்கள் கூறுகிறார்கள்.
தெருத் தெருவாக அலையும் மக்கள்
குடிநீருக்காக மக்கள் குடங்களுடனும், கேன்களுடனும் தெருத் தெருவாக அலைவதை சகஜமாகப் பார்க்க முடிகிறது.
விற்கப்படும் குடிநீர்
இந்த நிலையில் லாரிகளில் விற்கப்படும் குடிநீரை வாங்க மக்கள் அலை மோதுகின்றனர்.
சின்னக் குடம் 3 ரூபா.. பெரிய குடம் 4 ரூபா
இந்த லாரிகளில் குடிநீர் பிடிக்க, சின்னக் குடத்துக்கு தலா ரூ. 3ம், பெரிய குடமாக இருந்தால் ரூ. 4ம் வசூலிக்கிறார்கள். சரி வீட்டு டேங்க்கில் ஏற்ற வேண்டுமானால் லிட்டருக்கு இத்தனை என்றும் வசூலித்து மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.
ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி வாங்கப்போய்....
இந்த லாரிக்காரர்களுக்கும் நிறைய கிராக்கி உள்ளது. எனவே இவர்களிடம் இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது தண்ணீர் கொண்டு வந்து கொடுக்குமாறு மக்கள் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஜீவநதிகளாக மாறிய வற்றாத கிணறுகள்
மதுரையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள வற்றாத கிணறுகளிலிருந்துதான் இந்த தண்ணீரைப் பிடித்து வந்து விற்கிறார்களாம். இது பெரும் வியாபாரமாகவும் மாறியுள்ளது.
சென்னையிலும் இதே கதைதான் அண்ணே....
மதுரையில் மட்டுமல்ல சென்னையிலும் இதே கதைதான். சென்னை புறநகர்கள் பலவற்றிலும் கிணறுளைக் குறி வைத்து குட்டி குட்டி வாட்டர் டேங்கர் லாரிகள் வரிசை கட்டி தண்ணீர் பிடித்து பெரும் விலைக்கு அதை விற்று நல்ல காசு பார்த்து வருகின்றனர்.
இந்த நிலை இப்போது மதுரையம்பதிக்கும் வந்துள்ளது வேதனைதான்...!