பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் வெள்ளத்தில் மூழ்கி தனித் தீவாகிப் போன மகாபலிபுரம்
மாமல்லபுரம்: சென்னை மற்றும் கடரோல வட மாவட்டங்களில் பெய்த கன மழையால் பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் மாமல்லபுரம் தனித் தீவாகிப் போயுள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாய்ப் பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மீது பெரு வெள்ளம் ஓடியதோடு புராதனச் சின்னங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.
மேலும் வெள்ளத்தால் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
அதே போல பூஞ்சேரி, வெண்புருஷம், சாலவான் குப்பம், குழிப்பாந்தண்டலம் ஆகிய பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின. அப் பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து நிலையம், கடற்கரை கோயில், ஐந்து ரதம், தலசயன பெருமாள் கோயில், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாமல்லபுரம் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
மாமல்லபுரம் வந்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ராட்சத அலைகளாக இருப்பதால் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.