தூய்மையே சேவை... 'கம்யூனிஸ்ட்' மம்முட்டியும் மோடிக்கு ஆதரவு!
கொச்சி: பிரதமர் மோடியின் தூய்மையே சேவை (Swachhata hi Sewa Mission) திட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் மலையாள நடிகர் மம்முட்டி.
மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்த தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி வரை இந்த இயக்கத்தின் பிரசார தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூய்மையே சேவை என்ற இயக்கத்தில் நடிகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் பங்கேற்று இதனை பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால் ஆகியோர் இந்த இயக்கத்தில் இணைந்து தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி பிரசாரங்களும் மேற்கொண்டனர். தூய்மைதான் கடவுள் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மகன் உள்ளிட்டோர் துடைப்பத்தைக் கையிலெடுத்து, இந்த பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கேரளா திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில், "தூய்மையே சேவை இயக்கத்தில் சேர பிரதமர் மோடி, எனக்கு விடுத்த அழைப்பை கவுரமாகக் கருதுகிறேன். தூய்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் பெருமைக்குரியது.
மகாத்மா காந்தி தூய்மையை தெய்வாம்சம் என்று போற்றினார். தூய்மை என்பது சுயக் கட்டுப்பாடு போல தொடங்க வேண்டும் என்றும், அதை திணிக்கக் கூடாது என்றும் நான், கருதி வந்தேன். எனினும் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தூய்மை விஷயத்தில் காந்தியடிகளின் கனவை நனவாக்க பிரதமர் மோடி, மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரிக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.