ஆட்டம் காட்டும் புலி: வேட்டையாட மேலும் 30 வீரர்கள் வருகை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டம் உதகை தேயிலை தோட்டப்பகுதியில் சுற்றி வரும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க சத்தியமங்கலத்தில் இருந்து மேலும் 30 அதிரடிப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உதகமண்டலம் பகுதியில் 12 நாட்களுக்கு மேலாக பொது மக்களை அச்சுறுத்தி வரும் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர், அதிரடிப் படையினர் மற்றும் மருத்துவகுழுவினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் களத்தில் இறங்கி உள்ளனர்.
கூட்டுக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி புலியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் குந்தசப்பை பகுதியில் ஆட்கொல்லி புலி தொடர்ந்து 3 நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. புலியை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
புதருக்குள் புலி
திங்கட்கிழமை மாலை தும்மனட்டி கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் புதருக்குள் புலி பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் புலியை தேடி தும்மனட்டி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
செவ்வாய்கிழமையன்று காலை மீண்டும் தும்மனட்டி பகுதியில் கூட்டுக்குழுவினர் புலியை தேடும் வேட்டையை தொடங்கினர்.
பசுவை கொன்ற புலி
அந்தசமயத்தில் அந்த புலி அங்கிருந்து இடம்பெயர்ந்து அருகில் உள்ள கப்பச்சி கிராமத்திற்குள் நுழைந்தது. அங்கு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை அடித்துக்கொன்றது.
மாட்டை வாயில் கவ்விய படி ஊருக்குள் இழுத்து சென்றது.அதிகாலை நேரத்தில் பசுமாட்டுடன் புலி ஆக்ரோசமாக வந்ததை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த புலி பசுமாட்டுடன் புதருக்குள் சென்று மறைந்தது.
பொதுமக்கள் அச்சம்
தகவலறிந்ததும் தும்மனட்டி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கூட்டுக்குழுவினர் கப்பச்சி பகுதிக்கு விரைந்தனர். அவர்களை கண்டதும் கப்பச்சி பகுதி கிராம மக்கள் ஆத்திரமடைந்னர். கூட்டுக்குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.புலியை சீக்கிரத்தில் நீங்கள் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
மனித கறியின் சுவை
உப்பு சுவை நிறைந்த மனித கறியின் ருசிக்கு அந்த புலி அடிமையாகியுள்ளதாக கருதப்படுவதால் தொடர்ந்து மனிதர்களை குறி வைத்து தாக்கும் அபாயம் உள்ளது.
இதனால், புலி பதுங்கியுள்ள தும்மனட்டி கிராமத்தை சுற்றியுள்ள 17 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி இழப்பு
இதற்கிடையே தும்மனட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் புலியை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கடந்த 16 நாட்களாக தேயிலை பறிக்காத காரணத்தினால், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.