கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி... கோவையில் அதிர்ச்சி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தொழிலாளி ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் குறிச்சி நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. கூலித் தொழிலாளி. இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில், 3 மகள் மற்றும் ஒரு மகனுடன் ராஜா வசித்து வருகிறார்.

ராஜா வசித்த வீட்டின் அருகில் பாம்பு புற்று ஒன்று இருந்துள்ளது. அதனைப் பார்த்த ஊர் மக்கள் சிலர், அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதனால் ராஜாவிடம் , வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் அதற்கு ராஜா மறுப்புத் தெரிவித்து, அதே வீட்டில் இருக்க முயன்றுள்ளார். இதனால் ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே பிரச்சனை மூண்டது.
தொடர்ந்து ராஜாவிடம் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வந்தனர் அப்பகுதிவாசிகள். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு, தனது 4 குழந்தைகளுடன் ராஜா புகார் தெரிவிக்க வந்துள்ளார்.
அப்போது ஆட்சியர் வளாகத்தில் ராஜா திடீரென தனது 4 குழந்தைகளின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டு தனது உடலிலும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ராஜாவையும், குழந்தைகளையும் போலீசார் மீட்டனர். அவர்களது உடலில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் ராஜா மற்றும் குழந்தைகளை விசாரணைக்காக போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த வாரம் இதேபோல் கோவை மாவட்ட அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்கதையாகி வருவதால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications