நிறைவடையும் தருவாயில் அப்துல் கலாம் மணி மண்டபம்... ராமேஸ்வரத்தில் மோடி திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கட்டப்பட்டு வரும் மணி மண்டபத கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் ரூ. 15 கோடியில் கட்டப்பட்டு வந்த மணி மண்டபத்தின் இறுதி பணிகள் முடிவடைந்துவிட்டன.
ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், தனது பதவிக் காலத்துக்கு பின்னர் கல்லூரி, பள்ளி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவிற்குச் சென்றபோது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ரூ.50 கோடி செலவில்...
இந்த நிலையில் அங்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணியை, கடந்த ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
கிரானைட், கம்பிகள்
பெரும் தாமதத்திற்குப் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூ.15 கோடியில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஹைதராபாத், டெல்லி, ஜெய்ப்பூர், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிரானைட், கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருந்து கொண்டு வரப்பட்டு பணிகள் மிகவும் வேகமாகவே நடைபெற்று வந்தன.
3-ஆவது நினைவு தினம்
இந்நிலையில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன. வரும் ஜூலை 27-ஆம் தேதி கலாமின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் பேக்கரும்பில் உள்ள மணிமண்டபம், ராமேஸ்வரம் கோவில், பாம்பன் பாலம் ஆகிய பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர்.