தடைகளைத் தகர்த்து பல ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு... !
சென்னை: தமிழகத்தின் பல ஊர்களில் பொங்கல் விழாவின் கடைசி நாளான நேற்று தடைகளைத் தகர்த்து மஞ்சு விரட்டு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. சில ஊர்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டும் நடத்தப்பட்டது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில்தான் இவை நடத்த முடியாமல் போனதே தவிர பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா ஆகியவை சிறிய மற்றும் பெரிய அளவில் நடந்தேறியுள்ளன.
அலங்காநல்லூரில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. வாடிவாசல் முன்பு ஒப்பாரி வைத்தும், கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமும் நடத்தப்பட்டது. மேலும் பல ஆயிரம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியும் நடத்தினர்.
பழனி
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட் காளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நீதிமன்ற தடையின் காரணமாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை கோயிலில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக நேற்று அழைத்து வந்தனர். அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
கடும் மோதல்
இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்களும் குவிந்தனர். தொடர்ந்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கூடியிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர்.
வீரம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகேயுள்ள வீரம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடந்தேறியது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட முரட்டுக் காளைகள் குவிந்தன. இவற்றை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்களும் திரண்டனர். காலை 8 மணி முதல் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வெளியே வந்த முரட்டுக்காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். சுமார் 27 காளைகள் பங்கேற்றன.
சிறாவயல் மஞ்சு விரட்டு
சிவகங்கை மாவட்டம் சிறாவயல் அருகே உள்ள மருதகுடி, தென்கரை, மணமேல்பட்டி, அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளில் பொதுமக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகளை அவிழ்த்து விட்டனர். காளைகளை அவிழ்க்கக்கூடாது என பொதுமக்களை போலீஸார் எச்சரித்தனர். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கிருந்து போலீசார் போய் விட்டனர். அதன் பிறகு மஞ்சு விரட்டு நடந்தேறியது.
எருதாட்டம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், நாக்கியாம்பட்டி, கீரிப்பட்டி, உலிபுரம் கிராமங்களில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது. போலீசார் வந்து தடையை மீறினால் கைது செய்வோம் என எச்சரிக்கவே எருதாட்டத்தை கைவிட்டனர்.
பல கிராமங்களில் தடையின்றி
இதேபோல கெங்கவல்லி அருகே தடாவூரிலும், இடைப்பாடி அருகே வம்பனேரி, ஓமலூர் பகுதிகளிலும் தடையை மீறி எருதாட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் ஆவேசம் காரணமாக யாரையும் போலீஸாரால் தடுக்க முடியவில்லை.
பெண்களே களத்தில் குதித்த ஜல்லிக்கட்டு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது தாளவாய்பட்டினம் கிராமம். இக்கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட மாடுகளை அங்குள்ள மைதானத்தில் பெண்கள் கட்டிவைத்து, ஜல்லிக்கட்டுக்கும் தயாராகினர். ஏராளமான ஆண்களும் குவிந்திருந்தனர். தகவல் அறிந்து போலீசார் தடுத்தனர். இதனால், ஜல்லிக்கட்டு மாடுகளின் கொம்புகளில் கருப்பு துணி கட்டியும், மாடுகளின் முன்பு ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். மேலும், பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.