நியூட்ரினோ திட்டத்தால் எந்த ஆபத்தும் கிடையாது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அபயம்!
சென்னை: தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
தேனி மாவட்டம், பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ எனப்படும் ஆய்வுத் திட்டத்தை, மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இந்த திட்டமும் மீத்தேன் திட்டம்போல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் இருந்தது. ஆனால் அதுபோன்ற எந்தபாதிப்பும் இல்லாத திட்டம் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், மத்திய அரசால் ரூ.1,500 கோடி செலவில் ‘இந்திய நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது முக்கியமான அறிவியல் திட்டம் ஆகும். பிரபஞ்சத்தின் கட்டமைப்பை அறிந்துகொள்ள உதவும் இத்திட்டத்தால் இந்திய அறிவியல் வளர்ச்சிக்கும், இந்திய நாட்டுக்கும் பல பயன்கள் உண்டு. இதனால் எந்தவித ஆபத்தான தொழில் உற்பத்தியும் நிகழாது.
இதனை நிறைவேற்றுவதன் மூலம் நம் நாட்டு அறிவியல் வளர்ச்சி இயற்பியல் துறை மேம்படும். இத்திட்டம், தேனி மாவட்ட வளர்ச்சிக்கு பங்களிக்கும். அறிவியல் விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மேம்படுத்த உதவும்.
இந்தியாவின் அறிவியல் தற்சார்புக்கு உதவும் இத்திட்டத்தை தேனி மாவட்டத்தில் அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. மக்களின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் அமலாக்கப்பட்டு மாவட்ட மக்களுக்கும், இந்திய நாட்டுக்கும் பெரும் நன்மைகளை இத்திட்டம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த திட்டம் வரக்கூடாது என்று, வைகோ எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.