துலா ராசியில் குருபகவான்... காவிரியில் மகா புஷ்கர விழா கோலகலம்
மயிலாடுதுறை: இந்தியாவில் உள்ள 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் நேற்று திருக்கணித பஞ்சாங்கப்படி துலா ராசியில் இடம் பெயர்ந்துள்ளார்.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும் போது துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் புஷ்கரமானவர் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வாசம் செய்வது ஐதீகம்.
மகா புஷ்கர விழா
காவிரி நதியின் ராசி துலாம் ராசியாக இருப்பதாலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா புஷ்கரம் வருவதாலும் காவிரி பாயும் எல்லா இடங்களிலும்் இந்த புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது.
மயிலாடுதுறையில் கோலாகலம்
வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 8.25 மணிக்கு காவிரி ஆற்றில் புஷ்கர பிரவேசம் நடைபெற்றது.
தீர்த்தவாரி
முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை வந்தடைந்தனர். இதைப்போல வள்ளலார், படித்துறை காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலா கட்டத்தை அடைந்தனர்.
துலாகட்ட படித்துறை
மேலும், பரிமளரங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பட்டு காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைந்தார். பின்னர் துலாகட்டத்தில் 4 கோவில்களின் அஸ்திரதேவர்களுக்கும், யானைக்கால் படித்துறையில் தீர்த்தபேரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.
காஞ்சி சங்கராச்சாரியார்கள்
அப்போது துலாகட்டத்தின் வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீனங்களும், கிரீஸ் நாட்டு இளவரசி ஐரீன் ஆகியோரும் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் புனித நீராடல்
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணியளவில் ஆன்மிக ஊர்வலம் மயிலாடுதுறை கேதாரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தது. இந்த விழா வருகிற 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புதுப்பொலிவுடன் புஷ்கரணி
துலாகட்டத்தின் நடுவில் உள்ள ரிஷப நந்திமண்டபம், துலாகட்ட தீர்த்தவாரி மண்டபம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த விழாவுக்காக மயிலாடுதுறை துலாகட்ட காவிரியின் மையப்பகுதியில் 100 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் புஷ்கரணி அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் விழா
காவிரி மகா புஷ்கரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விழா தொடங்கியுள்ளது. தினமும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பலவகையான யாகங்களை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தினமும் மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட உள்ளது.