நெல்லை மேயர் பதவியைப் பெற அதிமுகவில் போட்டா போட்டி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் பதவி, மற்றும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையில் காலியாக கிடக்கும் பதவிகளுக்கு செப் 18ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அதிமுகவில் மகளிரணியில் கடும் போட்டி நிலவுகிறது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட சீட் பெற பயங்கர போட்டி நிலவுகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகமுவை சேர்ந்த விஜிலா சத்தியானந்த் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் ராஜ்யசபா எம்பியாகி விட்டதால் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே தனது மேயர் பதவியை ராஜினமா செய்து விட்டார். இதனால் கடந்த 7 மாதங்களாக மேயர் பதவி காலியாகி உள்ளது. இதற்கு செப் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிப் பெண்கள்
மேயர் தேர்தலில் சீட் பெறுவதற்காக அதிமுகவை சேர்ந்த பெண்கள் முட்டி மோதி வருகின்றனர். நெல்லை மாநகராட்சி மேயராக பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த ஜெயராணி, விஜிலா சத்தியானந்த் ஆகிய இருவரும் நன்கு படித்தவர்கள். இந்த வரிசையில் நன்கு படித்த பட்டதாரிகளுக்கு மேயர் பதவி கிடைக்கும் வாய்பபு உள்ளதாக கூறப்படுகிறது.
முட்டி மோதும் மகளிரணியினர்
நெல்லையில் மகளிரணியை சேர்ந்த புவனேஸ்வரி, மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வரும் மேகலா கென்னடி, முன்னாள் மாவட்ட செயலாளர் மகள் பியூலா, விஜிலா சத்தியானந்தின் சகோதரி மகள் வெண்ணிலா, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் சுதா பரமசிவனின் சகோதரர் மனைவி மற்றும் தற்போது கவுன்சிலராக பதவி வகிக்கும் ஒரு சில பெண்கள் மாவட்ட செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் மூலம் மேயர் தேர்தலில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
யாருக்கு அதிர்ஷ்டம்
இதற்காக அனைவரும் தங்களது பயோடேட்டா, கட்சியில் தங்களது பங்கு மற்றும் குடும்பத்தினரின் பங்கு குறித்து அறிக்கை தயாரித்து வருகின்றனர். ஆனால் இதில் முதல்வரின் முடிவே இறுதியானது. சாதாரணமானவர்கள் கூட வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதால் பிற சமுத்தாயத்தினரும் சீட் பெற மூத்த அமைச்சர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
திமுகவும் களத்தில்
அதிமுகவை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அமுதா, முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் ரேவதி அசோகன் உள்பட பலர் மோதி வருகின்றனர். இதனால் நெல்லை மேயர் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
வேட்பு மனு தாக்கல்
இதனிடையே நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி இடை தேர்தலுக்கு முதல் நாளில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மேயர், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உள்பட 87 காலி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை தொடங்கியது.
ஒருவர் மட்டும் தாக்கல்
வேட்பு மனு தாக்கலில் முதல் நாளில் பாளையங்கோட்டை யூனியன் மேல புத்தனேரி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முத்துகுட்டி என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் விநாகய சுப்பிரமணியத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு எந்த உள்ளாட்சி பதவிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
அரசியல் பிரமுகர்கள் வருகையால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் உள்ளாட்சிகள் இடைதேர்தல் அறிவிப்பு காரணமாக நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.












Click it and Unblock the Notifications